தமிழ்நாடு

“10 வருடங்களாக குட்டிச்சுவராக்கி வைத்துள்ளனர்.. மழைநீர் தேங்குவதை நிச்சயம் சரிசெய்வோம்” : முதல்வர் பதில்!

“கடந்த பத்து வருடங்களாக குட்டிச்சுவர் ஆக்கி வைத்திருக்கிறார்கள். அதை இப்போது விமர்சனம் செய்வதற்கு நாங்கள் தயாராகயில்லை. அடுத்த மழைக்காலம் வருவதற்குள் இதை நாங்கள் நிச்சயமாக சரிசெய்து விடுவோம்.”

“10 வருடங்களாக குட்டிச்சுவராக்கி வைத்துள்ளனர்.. மழைநீர் தேங்குவதை நிச்சயம் சரிசெய்வோம்” : முதல்வர் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளையும், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (31.12.2021) சென்னையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சீதாம்மாள் காலனி, டாக்டர் கிரியப்ப சாலை மற்றும் திருமலை பிள்ளை சாலை – பசுல்லா சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளையும், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளையும், பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீரை அகற்றிடும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

சென்னையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் அகற்றும் பணிகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறைக்கு முதலமைச்சர் நேற்று (30.12.2021) நள்ளிரவு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பெரியமேடு சைடனஹாம்ஸ் சாலை, பாரிமுனை பிரகாசம் சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் மோட்டார் பம்புகள் கொண்டு மழைநீர் வெளியேற்றப்படும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று (31.12.2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தேனாம்பேட்டை மண்டலம், சீதாம்மாள் காலனியில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் கொண்டு அகற்றிடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், டாக்டர் கிரியப்ப சாலையில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு மழைநீர் வடிகாலில் இருந்து மாம்பலம் கால்வாயில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இறுதியாக, கோடம்பாக்கம் மண்டலம், திருமலை பிள்ளை சாலை – பசுல்லா சாலை சந்திப்பில் டிராக்டர்களில் பொருத்தப்பட்ட நீர் இறைக்கும் பம்புகள் கொண்டு மழைநீரை வெளியேற்றும் பணிகளை பாவையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக, சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

கேள்வி : எதிர்பாராதவிதமாக இவ்வளவு பெரிய மழை பெய்திருக்கிறதே, அது பற்றி?

முதலமைச்சர் பதில் : வானிலை மையம் பொதுவாக முன்கணிப்பு செய்து தகவல் கொடுப்பார்கள். ஆனால், இந்த முறை அவர்களாலேயே கணிக்க முடியவில்லை. அதனால் எதிர்பாராதவிதமாக திடீரென்று பேய் மழை பெய்து இருக்கிறது. ஆகவே, தேங்கியிருந்த மழை தண்ணீரை எப்படியாவது சரிசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், நான் திருச்சியிலிருந்து வந்தவுடன் நேரடியாக பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள war room-க்கு சென்று, மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைக் குறித்து கலந்து பேசி என்னென்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டுள்ள மழைநீர் தேங்கியுள்ள இடங்களில், ஆங்காங்கே மோட்டார் பம்புசெட் வைத்து மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. அது ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கிறது. நிச்சயமாக இன்றைக்குள் எல்லாமே சரிசெய்யப்பட்டுவிடும்.

“10 வருடங்களாக குட்டிச்சுவராக்கி வைத்துள்ளனர்.. மழைநீர் தேங்குவதை நிச்சயம் சரிசெய்வோம்” : முதல்வர் பதில்!

கேள்வி :திடீர் மழை என்னும்போது, வானிலை மையம் முன்கணிப்பு அளிப்பதில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? உபகரணங்கள் மாற்றுவதற்கு மத்திய அரசிடம் ஏதாவது கோரிக்கை அளிக்கப்படுமா?

முதலமைச்சர் பதில் :அது அவர்கள் செய்ய வேண்டிய வேலை. இருந்தாலும், நீங்கள் சொன்னதற்காக, தமிழ்நாடு அரசு இது குறித்து ஒன்றிய அரசுக்கு நினைவுபடுத்தும்.

கேள்வி : மழை தண்ணீர் தேங்கி இருக்கக்கூடிய இடங்களிலேயே, மழை தண்ணீர் தேங்கும் சூழ்நிலை இருக்கிறது. திட்டமிடுதலில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா?

முதலமைச்சர் பதில் : அதாவது, கடந்த பத்து வருடங்களாக குட்டிச்சுவர் ஆக்கி வைத்திருக்கிறார்கள் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதை இப்போது விமர்சனம் செய்வதற்கு நாங்கள் தயாராகயில்லை. மழை தண்ணீர் தேங்குவதை சரிசெய்ய வேண்டும். அடுத்த மழைக்காலம் வருவதற்குள் இதை நாங்கள் நிச்சயமாக சரிசெய்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

நேற்று மட்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எதிர்பாராத கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய ஒவ்வொரு அதிகாரியும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். சீரமைப்புப் பணிகளை நானும் நேரடியாகவே ஆய்வுசெய்து கண்காணித்து வருகிறேன். விரைவில் நிலைமை சீரடையும்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர்
க.பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories