சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கர். இவர் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்தார். அதே பகுதியில் உள்ள இறைச்சிக் கடையில் ரஹீம், நூருல், ஹாஜா ஆகிய மூன்று பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, பழுதுபார்க்க வந்த வாகனங்களைச் சாலையில் பாக்கர் நிறுத்தி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த ரஹீம், நூருல், ஹாஜா ஆகிய மூன்று பேரும் பாக்கரிடம் தகராறு செய்துள்ளனர்.
பின்னர், அங்கிருந்தவர்கள் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். ஆனால் கடும் கோவத்திலிருந்த பாக்கர் இரும்பு கம்பியை எடுத்துக் கொண்டு இறைச்சிக் கடைக்குச் சென்று மூன்று பேரையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
அப்போது மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாக்கரை அனைவரும் தாக்கியுள்ளனர். மேலும் கடையிலிருந்த கறிவெட்டும் கத்தியால் பாக்கரை வெட்டிவிட்டு அங்கிருந்து மூன்று பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.
பிறகு ரத்த வெள்ளத்திலிருந்த பாக்கரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ரஹீம், நூருல் ஆகிய இரண்டு பேரை போலிஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த ஹாஜாவை போலிஸார் தேடி வருகின்றனர்.