தமிழ்நாடு

பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார்.. தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் - பின்னணி என்ன?

சத்துணவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார் வந்துள்ளது.

பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார்.. தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடரப்பட்டது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த மாதம் 18ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனைத்தொடர்ந்து முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

பணமோசடி தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை கடந்த 17ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.பி.மனோகர் தலைமையில் 9 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த தனிப்படைகள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், போலிஸார் தன்னை தீவிரமாக தேடுவதை அறிந்துக்கொண்டு அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக விக்ரமின் சாமி படத்தில் வரும் வில்லனை போன்று வெவ்வேறு கார்களில் மாறி மாறி தப்பித்து வருகிறார் ராஜேந்திர பாலாஜி. இன்னும் ஒரு படி மேல் சென்று வெவ்வேறு கெட் அப்-ல் ராஜேந்திர பாலாஜி வலம் வருவதாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஆனால் போலிஸாரும் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருக்கும் 600 பேரின் செல்போன் எண்களை ட்ராக் செய்து அவரை பிடிப்பதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி விமானம் மூலமாக வெளி நாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் காவல்துறை வழங்கியுள்ளது.

முன்னதாக ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனு விவகாரத்தில், தங்கள் தரப்பை கேட்காமல் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், சத்துணவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ராஜேந்திர பாலாஜி மீது மேலும் புகார் வந்துள்ளது.

கடந்த ஆண்டு சத்துணவு பணிக்காக அறிவிக்கப்பட்டு பின்னர் அறிவிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில், வேலை வாங்கித்தருவதாக பெற்ற பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக சாத்தூரை சேர்ந்த ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவை பெற்றுள்ள காவல்துறை புகாரில் உள்ள முகாந்திரம் குறித்து ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகார் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories