தமிழ்நாடு

“1.45 லட்சம் ஏக்கர் பயிர் நீரில் மூழ்கியது”: பயிர் சேதம் குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

1.45 லட்சம் ஏக்கர் பயிர் நீரில் மூழ்கியுள்ளது. இதில் ஒரு பாதிக்கப்பட்ட விவசாயி கூட விடுபடாமல் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“1.45 லட்சம் ஏக்கர் பயிர் நீரில் மூழ்கியது”: பயிர் சேதம் குறித்து   அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் வடகிழக்கு பருவமழை பயிர் சேதம் குறித்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை பின்வருமாறு:- வடகிழக்கு பருவ மழை கடந்த 26ம் தேதி முதல் தீவரமாக பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் மழை பொழிவு அதிகமாக உள்ளது. முதலமைச்சரின் அறிவுரையின்படி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து கடந்த 08ம் தேதி அன்று அனைத்து மாவட்டவேளாண்மை இணை இயக்குநர்களுக்கும் காணொளி காட்சி மூலம் அறிவுரை வழங்கப்பட்டது.

வேளாண்மைத்துறை:

தற்போது, வடகிழக்கு பருவ மழை இதுவரை இயல்பை விட 50 % கூடுதலாக பெய்துள்ளது. மேலும், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நடப்பு சம்பா பருவத்தில் 43.65 இலட்சம் ஏக்கரில் அனைத்துப் பயிர்கள் சாகுபடிசெய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் 1.45 இலட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் மழை நீரில் மூழ்கியுள்ளது.

தோட்டக்கலை (ம) மலைப்பயிர்கள் துறை:

சாகுபடி செய்யப்பட்டுள்ள 31.76 இலட்சம் ஏக்கர் தோட்டக்கலைப் பயிர்களில் 6,095 ஏக்கர் பரப்பு நீரில் மூழ்கியுள்ளது.

வடகிழக்கு பருவ மழை சேதங்களை கண்காணிக்கவும், மழையினால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை பாதுகாக்க தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிடவும் மாவட்ட வாரியாக கூடுதல் வேளாண்மை இயக்குநர், வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

  • மழையின் காரணமாக புகையான் பூச்சி மற்றும் நோய் தாக்கம் அதிகம் தென்படும். எனவே, வடகிழக்கு பருவமழைக்குப் பின் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்கத்தை கூர்ந்து கவனித்து வரும்முன் காத்திடவும்,

  • பூச்சி தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் போகும் போது வேம்பு சார்ந்த மருந்துகளை வேளாண் துறையின் பரிந்துரையின் படி உபயோகப்படுத்தவும்

  • வயல்களில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற வேண்டும். மழைநீர் வடிந்தவுடன் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் இவற்றுடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து, ஒரு இரவு முழுவதும் வைத்து வயலில் தூவ வேண்டும்.

  • மழைநீரில் மூழ்கிய பயிர்களில் நுண்சத்து குறைபாட்டினால் ஏற்படும் மஞ்சள் நோயை சரி செய்திட போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன், ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரங்களை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழி உரமாக தெளித்தல்

  • பயிர் தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ள பயிர்களுக்கு 4 கிலோ டிஏபி உரத்தினை 10 லிட்டர் தண்ணீ ரில் முதல் நாள் ஊரவைத்து மறுநாள் வடிகட்டி, கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ பொட்டாஷ் உரத்தினை , 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான கொண்டு தெளிக்கவும். இவ்வாறு செய்து மகசூல் இழப்பில் இருந்து பயிரை காப்பாற்றுதல்.

  • விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

சம்பா பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டியுள்ளதால் தொலைக்காட்சி, நாளிதழ்கள் மூலமாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தற்போது 9.11.2021 முடிய 10.43 இலட்சம் ஏக்கர் சம்பா பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

8.08 இலட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். கடந்தாண்டு இதே நாளில் 8.99 இலட்சம் ஏக்கர் பயிர் காப்பீடு செய்யப்பட்டது. 7.18 இலட்சம் விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். நடப்பாண்டில் கடந்தாண்டை விட 1.44 இலட்சம் ஏக்கர் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டமைக்காக 1,598 கோடி இழப்பீடு தொகை ஒப்பளிப்பு செய்யப்பட்டு 1,565 கோடி இழப்பீடுத்தொகை 5.92 இலட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குத் தேவையான இரசாயன உரங்கள் யூரியா 55,328 மெ.டன் , டிஏபி 19,177 மெ.டன், பொட்டாஷ் 35,577 மெ.டன் மற்றும் காம்ப்ள க்ஸ் 1,23,077 மெ.டன் இருப்பில் உள்ளது.

தற்போது மூழ்கியுள்ள பயிர்களில் மழைநீர் வடிந்தவுடன் 33% மேல் பாதிக்கப்பட்ட வயல்களை வருவாய், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையுடன் இணைந்து கணக்கீடு செய்து ஒரு பாதிக்கப்பட்ட விவசாயி கூட விடுபடாமல் மாநில பேரிடர் நிவாரண நிதி பெறுவதற்கான கருத்துருவை அரசிற்கு அனுப்பி வைத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்கள் வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டு, வேளாண் பெருங்குடி மக்களுக்கு தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கிடவும், வயல்களில் இருந்து வெள்ள நீரை வெளியேற்றிட உதவிட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories