தமிழ்நாடு

சென்னையில் எத்தனை நாளுக்கு மழை நீடிக்கும்? ஆழ்கடல் மீனவர்களுக்கு தொடரும் எச்சரிக்கை -வானிலை அப்டேட் என்ன?

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழையும், அதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு மிக கனமழைக்கும் வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் பேட்டி.

சென்னையில் எத்தனை நாளுக்கு மழை நீடிக்கும்? ஆழ்கடல் மீனவர்களுக்கு தொடரும் எச்சரிக்கை -வானிலை அப்டேட் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தொடரும் மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்ககூடும்.

இதன் காரணமாக இன்று (நவ.,08) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கோயம்புத்தூர், கரூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் எத்தனை நாளுக்கு மழை நீடிக்கும்? ஆழ்கடல் மீனவர்களுக்கு தொடரும் எச்சரிக்கை -வானிலை அப்டேட் என்ன?

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் அவ்வபோது கன மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பூரில் 14, செய்யூர் (செங்கல்பட்டு), மதுராந்தகம் (செங்கல்பட்டு), சோழவரம் (திருவள்ளூர்) தலா 13 செ.மீ, தாண்டையார்பேட்டை (சென்னை) 10 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொருத்தவரை 08.11.2021 முதல்  11.11.2021 வரை தெற்கு ஆந்திர மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இன்றும் நாளையும்,  தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும் தெற்கு வங்க கடல் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

அரபிக்கடல் பகுதியில் இன்றும் நாளையும் மத்தியகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும்  இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும்  வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 9 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த ஆண்டை பொறுத்தவரை இந்த ஆண்டு 40 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

banner

Related Stories

Related Stories