தமிழ்நாடு

“ ‘ஜெய்பீம்’ படத்தின் நினைவுகள் இரவு முழுவதும் மனதைக் கனமாக்கிவிட்டன” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

எனக்கு நடந்த அனைத்து நினைவுகளும் ஜெய்பீம் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது என மனக்கண் முன் நிழலாடியது

“ ‘ஜெய்பீம்’ படத்தின் நினைவுகள் இரவு முழுவதும் மனதைக் கனமாக்கிவிட்டன” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பல்வேறு தாக்கங்களை என்னுள் ஏற்படுத்தக் காரணமான ஜெய்பீம் படக் குழுவினருக்கு எனது பாராட்டுகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘ஜெய்பீம்’ திரைப்படம் பார்த்தது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

“நேற்றைய தினம் ஜெய்பீம் படத்தை பார்த்தேன். அதன் நினைவுகள் இரவு முழுவதும் மனதைக் கனமாக ஆக்கிவிட்டன. விளிம்புநிலை இருளர் மக்களின் வாழ்வியலையும் அவர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களையும் இதனைவிடத் துல்லியமாக, கலைப்பூர்வமாக காட்சிப்படுத்த இயலாது என்பதைக் காட்டிவீட்டார்கள்.

நடந்த ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து புனையப்பட்ட திரைக்கதையாக இருந்தாலும் ஒரு பார்வையாளர் மனதில் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகமிகக் கனமானதாக இருக்கிறது. சில நேரங்களில் சில காவல்துறை அதிகாரிகள் செய்யும் தவறுகள், அந்த துறைக்கே மாபெரும் களங்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதேநேரத்தில், உண்மையை வெளிக்கொண்டு வர இன்னொரு காவல்துறை அதிகாரியே துணையாக இருக்கிறார் என்பதையும் காட்டி இருக்கிறார்கள். நேர்மையும், மனசாட்சியும் கொண்ட அதிகாரிகளால் உண்மை நிலைநாட்டப்படும் என்பதையும் காட்டி உள்ளீர்கள்.

சட்டமும் நீதியும் கொண்டு எத்தகைய அவலகத்தையும் துடைத்தெறிய முடியும் என்பதையும் எடுத்துச் சொல்கிறது இந்தப் படம். ஒரு வழக்கறிஞர், ஒரு காவல்துறை அதிகாரி ஆகிய இருதரப்பும் நினைத்தால் சமூக ஒழுங்கீனங்களை தடுப்பு நிறுத்த முடியும்.

அமைதியான, அதேநேரத்தில் அழுத்தமான வழக்கறிஞராக நண்பர் சூர்யா திறம்பட நடித்துள்ளார். நடித்துள்ளார் என்பதைவிட வழக்கறிஞர் சந்துருவாகவே வாழ்ந்துள்ளார். இக்கதையை தேர்வு செய்ததும், அதனைப் படமாக எடுத்ததும், அதில் தானே நடித்ததுமென மூன்று பாராட்டுகளை சூர்யா பெறுகிறார்.

கதைக்களத்தை கலைக்களமாக மாற்றிச் சிறப்பாக இயக்கியுள்ள இயக்குநர் த.செ.ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற படங்கள் ஏராளமாக வர வேண்டும் என்பதே எனது ஆசையும் விருப்பமும் ஆகும்.

இருளர் குறித்து படம் எடுத்ததோடு தனது கடமை முடிந்துவிட்டது என கருதாமல் பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியினை நண்பர் சூர்யா வழங்கியது என்னை நெகிழச் செய்தது. இருளர் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியாகும் இது. இதுபோன்ற செயற்கரிய செயல்களை அனைவரும் செய்ய வேண்டும்.

ஜெய்பீம் படம் பார்க்க நான் சென்றபோது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துருவை சந்தித்தேன். அவர் என்னிடம் நீதியரசர் இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கையைக் கொடுத்தார்கள். மிசா சட்டத்தின்படி நாங்கள் கைது செய்யப்பட்டது குறித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை அது. காவல் நிலையம் ஒன்றில் நடந்த இதேபோன்ற தாக்குதல்தான் சென்னை மத்திய சிறையில் 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ம் நாள் இரவு எனக்கும் நடந்தது.

என் மீது விழுந்த பல அடிகளைத் தாங்கியவர் சிட்டிபாபு. அதனால் அவரது உயிரே பறிபோனது. அன்று நடந்த சித்திரவதைகளை சிறை டைரியாக சிட்டிபாபு எழுதியுள்ளார். இந்த நினைவுகள் அனைத்தும் ஜெய்பீம் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது என மனக்கண் முன் நிழலாடியது. இப்படி பல்வேறு தாக்கங்களை என்னுள் ஏற்படுத்தக் காரணமான ஜெய்பீம் படக் குழுவினருக்கு எனது பாராட்டுக்கள். நண்பர் சூர்யாவுக்கு எனது வாழ்த்தும் நன்றியும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories