தமிழ்நாடு

விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு : 43 இடங்கள்.. 27 கோடி - அதிகாலையிலேயே சோதனை தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலிஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு : 43 இடங்கள்.. 27 கோடி - அதிகாலையிலேயே சோதனை தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பணமும், சொத்து குவிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கின.

இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொந்த வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகின்றனர். இதில், சென்னை வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்து வருகிறது. புதுக்கோட்டை உள்ள விஜயபாஸ்கரின் வீடு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் விஜயபாஸ்கரின் முன்னாள் உதவியாளர் அஜய்குமார் என்பவர் இல்லத்தில் 6:45 மணியிலிருந்து எட்டு பேர் அடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸாசார் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அஜய்குமார் தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

மேலும் அஜய் குமார் என்பவருக்கு சொந்தமாக தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இல்லத்தில் சோதனை நடைபெற்ற பிறகு பள்ளியிலும் சோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் பள்ளிக்கு விடுமுறை அளிக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளன.

விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு : 43 இடங்கள்.. 27 கோடி - அதிகாலையிலேயே சோதனை தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டினத்தில் உள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரி தனலட்சுமியின் இல்லம் மற்றும் மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சண்முகம் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் இராமச்சந்திராநகர் உள்ள அவரது சகோதரர் உதயகுமார் வீடு மற்றும் கிராப்பட்டி காந்திநகர் முதல் தெரு உள்ள அவரது நெருங்கிய உறவினர் குருபாபு என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமாரின் வீடு பூட்டபட்டுள்ளது. எனவே அந்த வீட்டின் உள்ளே சென்று சோதனை செய்யும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. அந்த வீட்டை திறக்க சம்மந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. அதுமட்டுமல்லாது தற்போது வரை நடைபெற்ற சோதனையில் 27 கோடி வரை கணக்கில் வராத பணம் கைபற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories