தமிழ்நாடு

“பா.ஜ.கவுக்கு இதான் வேலை... எப்போதுமே மக்களுக்காக போராடமாட்டாங்க” : விருதுநகர் எம்.பி தாக்கு!

நூறு நாள் வேலை திட்டத்தை பற்றி சீமானும், அண்ணாமலையும் முழுமையாக புரிந்துகொள்ள தன்னுடன் கிராமங்களுக்கு வருகை தர வேண்டும் என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

“பா.ஜ.கவுக்கு இதான் வேலை... எப்போதுமே மக்களுக்காக போராடமாட்டாங்க” : விருதுநகர் எம்.பி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நூறு நாள் வேலை திட்டத்தை பற்றி சீமானும், அண்ணாமலையும் முழுமையாக புரிந்துகொள்ள தன்னுடன் விருதுநகர் மாவட்ட கிராமங்களுக்கு வருகை தர வேண்டும் என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தேவையற்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புரிதலின்றிப் பேசினார். அவரது கருத்தை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆமோதித்துள்ளார்.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும் விருதுநகர் எம்.பியுமான மாணிக்கம் தாகூர் இன்று விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “சீமான் சினிமா செட்டில் அமர்ந்துகொண்டு 100 நாள் வேலை திட்டத்தை பற்றி அவமானகரமாக பேசுகிறார். அண்ணாமலைக்கு போலீஸ் ஸ்டேஷன் பற்றி மட்டும்தான் தெரியும். இத்திட்டம் பற்றி ஒன்றும் தெரியாது.

இருவரும் 100 நாள் வேலை திட்டத்தை பற்றி அறிய காமராஜர் பிறந்த மண்ணான விருதுநகர் மாவட்டத்திற்கு வருகைதரவேண்டும். நானே உடன் அழைத்துச் சென்று அத்திட்டத்தை பற்றி எடுத்துச் சொல்ல தயாராக இருக்கிறேன்.” என்றார்.

மேலும், கேஸ் விலை 15 ரூபாய் கூடியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர் எம்.பி, “பெட்ரோல் விலையை ரூபாய் 100 ஆக்கி சாதனை புரிந்த மோடி கேஸ் விலையை சில நாட்களில் ஆயிரம் ரூபாயாக உயர்த்தி சாதனை படைக்க உள்ளார். இதற்கு மக்கள் 2024ல் முற்றுப்புள்ளியை வைப்பார்கள் எனத் தெரிவித்தார்.

வார இறுதி நாட்களில் கோயில் திறக்க தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கோயில்கள் முன்பு தமிழக பா.ஜ.க போராட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு, “பா.ஜ.கவை பொறுத்தவரை மக்களுக்கு சம்பந்தமில்லாத போராட்டங்களை நடத்தி, மக்கள் பிரச்சினைகளை திசைதிருப்புவதற்கான சங்கிகளின் தொடர் முயற்சியில் இது ஒரு பகுதி. பெட்ரோல் டீசல், கேஸ் விலை உயர்வில் இருந்து மக்களை திசைதிருப்புவதற்காக இந்த வேலையை பார்க்கின்றனர்.” எனத் தெரிவித்தார்.

மேலும், பட்டாசு தொழிலை விட மக்கள் உயிர் முக்கியம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “உயிர் முக்கியம் என்பதில் சந்தேகம் இல்லை. உயிரிழப்பு காரணமாக தடை விதிப்பது என்றால் வாகனங்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். அதே நேரத்தில் மாசு காரணமாக என்று பார்த்தால் உச்சநீதிமன்றத்திற்கே தெரியும் டெல்லி மாசுக்கு 26 காரணங்கள் என்று. 26வது காரணம்தான் பட்டாசு மாசு. முதல் 6 காரணிகள் தான் 90% மாசு ஆகும்.

உச்சநீதிமன்றம் மட்டுமல்ல பலரும் பட்டாசு தொழிலைப் பற்றி தவறான புரிதல் கொண்டு இருக்கிறார்கள். பட்டாசுகளால் மாசு ஏற்படுகிறது என்ற தவறான புரிதல் கொண்ட யாராக இருந்தாலும் என்னை தொடர்புகொண்டால் சிவகாசி பட்டாசு ஆலைக்கு அழைத்துச் சென்று விளக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories