
தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மேற்காசியப் போர் காரணமாக கடும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை முன்கூட்டியே அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறிய ஒன்றிய அரசின் தலைமை அமைச்சர், பிரதமர் மோடி, “கொரோனா பெருந்தொற்று காலத்தைப் போல மக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்” என எச்சரித்திருக்கிறார்.
நாள்தோறும் சிலிண்டர் பற்றாக்குறை; அதனால் உண்டாகும் விலை உயர்வு உள்ளிட்டவைகளால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகிவரும் பொதுமக்கள், ஒன்றிய பா.ஜ.க அரசின் மீது கடும் அதிருப்தியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், தன் மீது விழுந்திருக்கிற கறையைப் போக்க, இடஒதுக்கீடு அமல்படுத்தம் என்ற திசைதிருப்பல் நடவடிக்கைக்கு வித்திட்டிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இதனை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,
“‘கோவிட் காலத்தைப் போல’ என மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.
பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை script-ஐத் தற்போது கையிலெடுத்துள்ளது.
பா.ஜ.க. ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அ.தி.மு.க.வோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள்.
சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது?
மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. "இத்தனைக்கும் பொறுப்பான ஒன்றிய பா.ஜ.க. அரசு என்ன செய்கிறது?" என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி..!”






