தமிழ்நாடு

”ஊக்கத்தொகை முதல் சோலார் விளக்குகள் வரை” - இந்து சமய அறநிலையத்துறையின் அசத்தலான 112 அறிவிப்புகள்!

சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ள முத்தான அறிவிப்புகளின் முழு விவரம்.

”ஊக்கத்தொகை முதல் சோலார் விளக்குகள் வரை” - இந்து சமய அறநிலையத்துறையின் அசத்தலான 112 அறிவிப்புகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்து சமய அறநிலையத்துறை (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை) அடங்கிய அறிவிப்புகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டமன்றத்தில் வெளியிட்டார்.

அதன் முழு விவரம் பின்வருமாறு:-

1. ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூபாய் 1,000/- வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 13 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

2. திருக்கோயில்களின் பாதுகாப்பிற்கென 10,000 பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.

3. திருவருட்பிரகாச வள்ளலார் அவர்களின் புகழைப் போற்றும் வகையில் ‘’வள்ளலார் சர்வதேச மையம்’’ வடலூரில் அமைக்கப்படும்.

4. கடந்த பத்து ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளைக் கண்காணிப்பதற்கு மூன்று மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வு பெற்ற மாண்பமை நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

5. சென்னை உட்பட தமிழகத்தில் பத்து இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ரூபாய் 150 கோடி செலவில் தொடங்கப்படும்.

6. தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் ரூபாய் 10 கோடி செலவில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும்.

7. பழநி மற்றும் திருவரங்கம் திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டமானது விரிவுபடுத்தப்பட்டு செப்டம்பர் 17-ஆம் நாள் முதல் திருத்தணிகை, சமயபுரம், திருச்செந்தூர் ஆகிய மூன்று திருக்கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்.

8. அர்ச்சகர், ஓதுவார், பிரபந்தவிண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் ஆகியோருக்கு பயிற்சிக் காலத்தில் ஏற்கனவே ரூபாய் 1,000/- வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்த ஊக்கத்தொகை ரூபாய் 3,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.

9. திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடிகாணிக்கைக்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. அதற்கான கட்டணத்தை அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு திருக்கோயில் நிர்வாகமே செலுத்தும்.

10. மணமக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும், திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

11. தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான திருக்கோயில்களை அவற்றின் தொன்மை மாறாமல் பராமரிப்பது குறித்த வழிமுறைகளைக் கொண்ட கையேடு (Conservation Manual) வெளியிடப்படும்.

12. திருத்தணிகை, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை, திருக்கழுகுன்றம் ஆகிய ஐந்து மலைத் திருக்கோயில்களுக்கு கம்பிவட ஊர்தி வசதி செய்திட சாத்தியக் கூறுகள் ஆராயப்படுவதற்காக ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கப்படும்.

13. திருக்கோயில்களில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் தற்காலிகமாகப் பணிபுரியும் சுமார் 1,500 தகுதியான பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்படுவர்.

14. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், விளையாட்டு மைதானம் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் ரூபாய் 25 கோடி செலவிடப்படும்.

15. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். இதன் மூலம் 496 ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பயனடைவார்கள்.

16. பக்தர்கள் அதிகளவில் வருகைபுரியும் 10 திருக்கோயில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் கூடிய முதலுதவி மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும். இதற்காக ரூபாய் 10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

17. திருக்கோயில்களுக்குச் சொந்தமான 114 சமய நூலகங்கள் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். தேவைகளின் அடிப்படையில் புதிய சமய நூலகங்கள் உருவாக்கப்படும்.

18. திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை விழிப்புடன் பாதுகாத்து மீட்பதற்கு 38 மாவட்டங்களில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களில் வட்டாட்சியர்கள் உள்பட 108 பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்கான செலவு ஆண்டொன்றிற்கு ரூபாய் 8 கோடியே 18 இலட்சமாகும்.

19. திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் திருக்கோயில் பணியாளர்களுக்கு நிர்வாகப் பயிற்சி மையம் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

20. ஆணையர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடம் ரூபாய் 15 கோடி செலவில் கட்டப்படும்.

21. துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு 108 புதிய ஊர்திகள் ரூபாய் 8 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்.

22. திருக்கோயில்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தரமான திருநீறு மற்றும் குங்குமப் பிரசாதம் வழங்குவதற்காக 8 திருக்கோயில்களில் தயாரித்து, பிற திருக்கோயில்களுக்கும் வழங்கிட ரூபாய் 3 கோடி செலவில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

23. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 திருக்கோயில்களின் நிருவாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக தற்போது வழங்கப்பட்டு வரும் ஆண்டுக்கான அரசு மானியம் ரூபாய் 3 கோடியிலிருந்து ரூபாய் 6 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

24. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 225 திருக்கோயில்களுக்கு நிருவாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக வழங்கப்பட்டு வரும் அரசு மானியம் ரூபாய் 1 கோடியிலிருந்து ரூபாய் 3 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

25. முதற்கட்டமாக 10 முக்கியத் திருக்கோயில்களில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.

26. சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள எழும்பூர் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், திருக்கோயிலின் வருவாயைப் பெருக்கும் வகையில் ரூபாய் 50 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் கட்டப்படும்.

27. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள 1,000 திருக்கோயில்களின் திருப்பணிக்காக ஏற்கனவே தலா ரூபாய் 1 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் 1,250 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூபாய் 2 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூபாய் 25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

28. கிராமப்புறத் திருக்கோயில் திருப்பணித் திட்டத்தின்படி கிராம பகுதிகளில் அமைந்துள்ள 1,000 திருக்கோயில்களின் திருப்பணிக்காக ஏற்கனவே தலா ரூபாய் 1 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் 1,250 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூபாய் 2 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூபாய் 25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

29. “திங்கள் தோறும் திருக்கோயில்களில் தூய்மைப்பணி” திட்டத்தின் கீழ் திருக்கோயில்களின் அனைத்து இடங்களிலும் உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

30. சென்னை, பழநி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மூத்த குடிமக்களைப் பேணிப் பாதுகாக்க மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் ரூபாய் 5 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் தொடங்கப்படும்.

31. திருக்கோயில்கள் சார்பாக பக்தர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய 22 திருமண மண்டபங்கள் ரூபாய் 53 கோடியே 75 இலட்சம் செலவில் கட்டப்படும்.

32. துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமக்கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கு தமிழ்நாடு திருக்கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத் தொகை ரூபாய் 3,000 -லிருந்து ரூபாய் 4,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

மேலும் கிராமப்புற பூசாரிகள் நலவாரிய உறுப்பினர் மரணமடைந்தால் இறுதிச்சடங்கிற்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூபாய் 2,000/- லிருந்து ரூபாய் 5,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும். உறுப்பினர் மரணடைந்தால் அவரது வாரிசுதாரருக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூபாய் 15,000/- லிருந்து ரூபாய் 50,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.

33. திருக்கோயில்களுக்கு பெருமளவில் வருகை தரும் பக்தர்களுக்கான முழுமையான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த, 40 முதுநிலைத் திருக்கோயில்களுக்கான ஒருங்கிணைந்த பெருந்திட்டம் (Master Plan) வகுக்கப்பட்டு ரூபாய் 200 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

34. அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் 6 இடங்களில் ரூபாய் 21 கோடியே 40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

35. திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

36. பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலில் பக்தர்களின் அனைத்து தேவைகளை நிறைவு செய்யும் வகையில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் ரூபாய் 125 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

37. ஆண்டு முழுவதும் அதிகளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்லும் பழநி, சமயபுரம், திருவண்ணாமலை, திருத்தணி மற்றும் இராமேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் ரூபாய் 250 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

38. இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் திருப்பணி மேற்கொள்வதற்காக நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் உட்பட 300 திருக்கோயில்களில் இருந்து பெறப்பட்ட திருப்பணி முன்மொழிவுகள் முறையாக பரிசீலிக்கப்பட்டு குடமுழுக்கிற்கான திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பணிகளுக்குத் தொடர்ந்து அனுமதி வழங்கப்படும்.

39. 18 திருக்கோயில்களுக்கு ரூபாய் 8 கோடியே 70 இலட்சம் செலவில் புதிய திருத்தேர்கள் செய்யப்படும்.

40. திருக்கோயில்களுக்குச் சொந்தமான 37 திருக்குளங்கள் ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

41. மதுரையில், திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி ரூபாய் 35 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

42. காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட இடத்தில் திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வணிக வளாகம் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

”ஊக்கத்தொகை முதல் சோலார் விளக்குகள் வரை” - இந்து சமய அறநிலையத்துறையின் அசத்தலான 112 அறிவிப்புகள்!

திருக்கோயில் திருப்பணிகள்

43. திருவேற்காடு அருள்மிகு தேவிகருமாரியம்மன் திருக்கோயில் உட்பட 30 அம்மன் திருக்கோயில்களுக்கு 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

44. ஆன்மிகச் செம்மல் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான இடங்களை பாதுகாக்கும் நோக்கோடு சுற்றுச்சுவர் மற்றும் வனம் அமைப்பதற்கு ரூபாய் 15 கோடி செலவிடப்படும்.

45. 34 சைவ திருத்தலங்களுக்கு ரூபாய் 9 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

46. தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருள்மிகு வன்னியப்பர் திருக்கோயிலுக்கு ரூபாய் 9 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

47. 24 வைணவத் திருத்தலங்களுக்கு ரூபாய் 5 கோடியே 68 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

48. திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி, ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்களில் ரூபாய் 4 கோடியே 50 இலட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

49. விழுப்புரம் மாவட்டம், சிங்கவரம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக மலைப்பாதை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூபாய் 3 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

50. மதுரை, அழகர்கோயில், அருள்மிகு சோலைமலை முருகன் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக மலைப்பாதையை மேம்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூபாய் 7 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

51. திருக்குவளை, எட்டுக்குடி, சுப்பிரமணியர் மற்றும் சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயில்களில் ரூபாய் 2 கோடியே 20 இலட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

52. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், கீழப்பாவூர் அருள்மிகு திருவாலிஸ்வரர் திருக்கோயிலில் ரூபாய் 1 கோடியே 80 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

53. திருநீர்மலை, அருள்மிகு அரங்கநாதப் பெருமாள் திருக்கோயிலில் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

54. சிவபெருமானின் பஞ்ச சபைகளில் ஒன்றான குற்றாலம் சித்திரசபையில் ரூபாய் 90 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

55. திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலின் மின்வசதி ரூபாய் 90 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.

56. கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் ரூபாய் 85 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

57. கடலூர் மாவட்டம், பொய்யனப்பாடி, அருள்மிகு ஆண்டவர் செல்லியம்மன் திருக்கோயில் மதிற்சுவர் ரூபாய் 80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

58. அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் வடகிழக்கு கோட்டை மதிற்சுவர் ரூபாய் 62 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

59. அட்டவீரட்டானத் திருத்தலங்களுள் இரு திருக்கோயில்களில் ரூபாய் 60 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

60. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பட்டீஸ்வரம் அருள்மிகு பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயிலில் ரூபாய் 60 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

61. கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர், அருள்மிகு திருவேங்கடநாத பெருமாள் திருக்கோயிலில் ரூபாய் 37 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

62. திருப்பத்தூர் மாவட்டம், மடவாளம், அருள்மிகு அங்கநாதீஸ்வரர் திருக்கோயிலில் ரூபாய் 35 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

63. கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர், அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

64. திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், அருள்மிகு கோடிலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் ரூபாய் 24 இலட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

65. கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை, அருள்மிகு மகாதேவர் திருக்கோயிலுக்குச் சொந்தமான பழைய அரண்மனை கட்டடத்தில் இயங்கி வந்த பள்ளிகள் ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.

திருத்தேர் திருப்பணிகள்

66. சென்னை, அருள்மிகு காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலுக்கு ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித் திருத்தேர் செய்யப்படும்.

67. இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித் திருத்தேர் செய்யப்படும்.

68. 9 திருக்கோயில்களுக்குச் சொந்தமான திருத்தேர்கள் ரூபாய் 2 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.

69. திருத்தேர்கள் இயற்கைச் சீற்றங்களால் பழுதடையாது பாதுகாத்திட திருத்தேர் கொட்டகைகள் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ரூபாய் 10 கோடி செலவில் அமைக்கப்படும்.

திருக்குளம்

70. சென்னை, மாதவரம், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலுக்குப் புதிய திருக்குளம் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

நந்தவனங்கள்

71. பூத்துக் குலுங்குகின்ற பூஞ்சோலைகளாக திருக்கோயில்கள் காட்சியளிப்பதற்கு, 100 திருக்கோயில்களில் ரூபாய் 15 கோடி செலவில் புதியதாக மலர்த் தோட்டங்கள் அமைத்து, தல மரங்களையும் நட்டுப் பராமரிக்கப்படும்.

பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள்

72. இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், அருள்மிகு இலட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

73. அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில்

ரூபாய் 9 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய விருந்து, காதுகுத்து மற்றும் முடிகாணிக்கை செலுத்தும் ஒன்பது மண்டபங்கள் கட்டப்படும்.

74. வடபழனி, அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அன்னதானக் கூடம் மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய முடி காணிக்கை மண்டபம் ரூபாய் 9 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

75. இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூபாய் 2 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் 20 விருந்து மண்டபங்கள் கட்டப்படும்.

76. சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 18 இடங்களில் உள்ள சிதிலமடைந்த வாடகைக் குடியிருப்புகளை அகற்றி விட்டு புதிய வணிக வளாகம், குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

77. சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான காலியிடத்தில் உபயதாரர் பங்களிப்போடு ரூபாய் 2 கோடி செலவில் பணியாளர் குடியிருப்புகளும், பக்தர்கள் தங்கும் விடுதியும் கட்டப்படும்.

78. மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள இடத்தில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்படும்.

79. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் முடிகாணிக்கை மண்டபம் ரூபாய் 1 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

80. மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ஆலங்குளத்தில் உள்ள நிலத்திற்கு ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் கட்டப்படும்.

81. சிவகங்கை மாவட்டம், மடப்புரம், அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வணிக வளாகம், பக்தர்கள் தங்கும் அறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவை ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

82. அழகர்கோயில், அருள்மிகு சோலைமலை முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் சஷ்டி மண்டபம் கட்டப்படும்.

83. திருப்பூர் மாவட்டம், தூரம்பாடி, அருள்மிகு குலமாணிக்கீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் புதிய இளைப்பாறும் மண்டபம் ரூபாய் 85 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

84. கன்னியாகுமரி மாவட்டம், திக்குறிச்சி, அருள்மிகு மகாதேவர் திருக்கோயிலின் சுற்றுச் சுவர் மற்றும் படித்துறை பராமரிப்புப் பணிகள் ரூபாய் 75 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

85. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அங்காளம்மன் திருக்கோயில் வளாகத்தில் ரூபாய் 55 இலட்சம் மதிப்பீட்டில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்படும்.

86. திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்கோடு, அருள்மிகு அக்னீஸ்வரசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்கள் வசதிக்காக ரூபாய் 50 இலட்சம் செலவில் தங்கும் விடுதி ஏற்படுத்தப்படும்.

87. மருதமலை, அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் புதிய முடிகாணிக்கை மண்டபம் ரூபாய் 45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

88. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு, விரிஞ்சிபுரம், அருள்மிகு மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயிலில் அன்னதானக் கூடம் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

89. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அங்காளம்மன் திருக்கோயில் வளாகத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

90. மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடம் ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

அசையா சொத்துக்களைப் பாதுகாத்து மேம்படுத்துதல்

91. சென்னை, வடபழனி, அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பல்நோக்குக் கட்டடம் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

92. திருக்கோயிலுக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களிலிருந்து திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் கொள்கைகளை உருவாக்கிட தேர்ந்த ஆலோசகர்கள் நியமனம் செய்யப்படுவர்.

93. சென்னை, கொசப்பேட்டை, அருள்மிகு ஆதி மொட்டையம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான சந்தை ரூபாய் 50 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.

94. காரைக்குடி, அருள்மிகு கொப்புடைநாயகியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான சிதிலமடைந்த நகர வாரச் சந்தையை அகற்றி, ரூபாய் 1 கோடியே 50 இலட்சம் செலவில் புதியதாக கட்டப்படும்.

பயிற்சிப் பள்ளிகள் மற்றும் நலப்பணிகள்

95. சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூபாய் 1 கோடியே 50 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.

96. மாமல்லபுரம், ஆளவந்தார் அறக்கட்டளையில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் வைணவ பிரபந்த பாடசாலை ஏற்படுத்தப்படும்.

97. சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்களில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில், புதிய ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள் ஏற்படுத்தப்படும்.

98. திருத்தணிகை, அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலின் உபக்கோயிலான அருள்மிகு கோட்டா ஆறுமுகசாமி திருக்கோயில் வளாகத்தில் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளி ஏற்படுத்தப்படும்.

99. திருவண்ணாமலை மற்றும் மதுரையில் அமைந்துள்ள ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

100. திருச்சி, குணசீலம், அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் இயங்கிவரும் மனநலக் காப்பகம் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

101. திருநாகேஸ்வரம், அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள தவில், நாதஸ்வர இசைப்பள்ளி மேம்படுத்தப்படும்.

102. ஸ்ரீவில்லிப்புத்தூர், அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில் சார்பாக திவ்ய பிரபந்த பாடசாலை மீண்டும் தொடங்கப்படும்.

103. திருப்பெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி புதியதாகத் தொடங்கப்படும்.

104. திருக்கோயில் யானைகளுக்கு மாதம் இருமுறை மருத்துவ பரிசோதனை செய்து, மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவ வசதி, உணவு, குளியல் வளாகம், நடை பயிற்சி வசதி மற்றும் தேவையான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும்.

வணிக வளாகம்

105. திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூபாய் 98 இலட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்படும்.

106. ஓசூர், அருள்மிகு காளிகாம்பாள் காமாட்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் மலர் வணிக வளாகம் ரூபாய் 80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

107. திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம், அருள்மிகு வேதபுரிஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

இதர பணிகள்

108. நாகப்பட்டினம் இணை ஆணையர் மண்டலத்திற்கான ஒருங்கிணைந்த அலுவலக வளாகம் ரூபாய் 3 கோடியே 53 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

109. மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில், திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆகியவற்றிலுள்ள கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படும்.

110. முதுநிலை திருக்கோயில்களின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் முழு விவரக்காட்சிக் கையேடுகள் (Coffee Table Books) வெளியிடப்படும்.

111. திருக்கோயில்களின் கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள இடிதாங்கிகள் ஆய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும். மேலும், தேவையான இடங்களில் புதியதாகப் பொருத்தப்படும்.

112. சூரிய ஒளி வெப்ப விளக்குகள் (Solar lights) தேவைப்படும் அனைத்துத் திருக்கோயில்களிலும் பொருத்தப்படும்.

banner

Related Stories

Related Stories