தமிழ்நாடு

”OBC இடஒதுக்கீடு: எங்களுக்கு 69% வேண்டும்” - ஐகோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் வில்சன் திட்டவட்டம்!

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

”OBC இடஒதுக்கீடு: எங்களுக்கு 69% வேண்டும்” - ஐகோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் வில்சன் திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி தி.மு.க எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு பெற உரிமை உள்ளதாகவும், இந்த இட ஒதுக்கீட்டை எப்படி வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய ஒன்றிய - மாநில சுகாதார துறை செயலாளர்கள், மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, தி.மு.க சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நேற்று, இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது குறித்து ஒன்றிய அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்காக இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

இதுசம்பந்தமாக அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

தொடர்ந்து, தி.மு.க தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஒன்றிய அரசு இட ஒதுக்கீடு அமல்படுத்த முடியாது எனவும், 69 சதவீதவிட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், நீண்ட போராட்டங்களுக்கு பின் கிடைத்த இடஒதுக்கீட்டை பறிக்க கூடாது எனவும் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

banner

Related Stories

Related Stories