தமிழ்நாடு

“நாடகம் போடாதீங்க அண்ணாமலை... நீங்க மோடியை கண்டிச்சுதான் போராடணும்” : மாட்டிக்கொண்ட ஆட்டுக்குட்டி!

கண் துடைப்புக்காக அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

“நாடகம் போடாதீங்க அண்ணாமலை... நீங்க மோடியை கண்டிச்சுதான் போராடணும்” : மாட்டிக்கொண்ட ஆட்டுக்குட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் மேகதாது அணையை கர்நாடக பா.ஜ.க அரசு கட்டியே தீருவோம் என அடம்பிடித்து வருகிறது. புதிதாக கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மையும் இதில் பிடிவாதமாக இருந்து வருகிறார்.

கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசும், தி.மு.க கூட்டணிக் கட்சிகளும் போராடி வரும் நிலையில், தமிழக பா.ஜ.கவோ கர்நாடக பா.ஜ.க அரசை எதிர்க்க முடியாத நிலையில் மவுனம் சாதித்து வருகிறது.

கர்நாடகாவில் ஐ.பி.எஸ் பணியை ராஜினாமா செய்தபிறகு நடைபெற்ற பிரியாவிடைக் கூட்டத்தில், “நான் எப்போதுமே பெருமைமிக்க கன்னடன். எனது உயிர் இருக்கும் வரை, எனது உடலில் கடைசி மூச்சு இருக்கும் வரை, நான் ஒரு பெருமைமிக்க கன்னடன்.” எனப் பேசினார் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.

தற்போது தமிழ்நாடு பா.ஜ.கவின் தலைவராகியிருக்கும் அண்ணாமலை, காவிரி உள்ளிட்ட விவகாரங்களில் கர்நாடகாவுக்கு ஆதரவாக நடப்பாரா, தமிழ்நாட்டுக்கு ஆதரவாகச் செயல்படுவாரா என கேள்வி எழுந்தது.

இந்நிலையில், கண் துடைப்புக்காக அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார். கர்நாடக பா.ஜ.க அரசின் முடிவை எதிர்த்து, ஆகஸ்ட் 5ல், தஞ்சாவூரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பா.ஜ.க ஆளும் கர்நாடக அரசிடம் பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காண முயலாமல் தன் மீதான குற்றச்சாட்டை திசைதிருப்பும் வகையிலேயே அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் இதுகுறித்து கூறுகையில், “போகாத ஊருக்கு அண்ணாலை வழி கூறுகிறார். காவிரி பிரச்னையில், தமிழக தலைவராக நீங்கள் என்ன செய்தீர்கள் என எதிர்காலத்தில் யாரும் கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே, நாடகம் நடத்துகிறார்.” எனச் சாடியுள்ளார்.

மேலும் பேசியுள்ள திருநாவுக்கரசர் எம்பி., “காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் இருந்தபோது தமிழ்நாட்டு அரசுக்குத்தான் தமிழக காங்கிரஸ் உறுதுணையாக இருந்ததே தவிர, இப்படி நாடகம் நடத்தவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கூறுகையில், “கர்நாடகாவில் இருந்தால் கன்னடன்; தமிழ்நாடு பா.ஜ.க தலைவரானதும் தமிழன் என்று இரட்டை வேடம் போடுகிறார். இதற்கு பதில், கர்நாடகாவுக்கு சென்று, அங்கு உள்ளவர்களிடம் பேசி தமிழக உரிமைகளை பெற்று வரலாமே” என விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், “பா.ஜ.க.வின் தமிழக தலைவரான அண்ணாமலை காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்பதாக கூறியுள்ளார். உண்மையிலே போராட்டம் நடத்த வேண்டும் என்றால் பிரதமரை கண்டித்துத்தான் போராட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories