தமிழ்நாடு

10 ஆண்டுகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்கள்? EPS-OPSக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சரமாரி கேள்வி

"மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தை அடுத்த வாரத்தில் கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

10 ஆண்டுகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்கள்? EPS-OPSக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சரமாரி கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து செய்யாததை 2 மாதமே ஆகியுள்ள அரசு செய்ய வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் சரியாக இருக்கும் என அதிமுகவினருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். ஆதரவற்றோர் மன நோயாளிகளுக்கான மீட்பு வாகனத்தை அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பின்னர் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 lpm உற்பத்தி திறன் கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர். மேலும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, தேசிய நல வாழ்வு குழும இயக்குநர், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், திமுக வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் 30 லட்சத்து 75 ஆயிரம் 292 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 13 லட்சம் தடுப்பூசி கூடுதலாக ஒன்றிய அரசு வழங்கி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாக கூறினார். ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தேவையான அளவு தற்போது சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் செப்டம்பருக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என கூறியுள்ளது. அதன் படி ஊரக உள்ளாட்சி தேர்தல் செப்டம்பருக்குள் நடைபெறும் . நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதத்திற்குள் நடைபெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை எத்தனை நிறைவேற்றி உள்ளனர் என்பதை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் தெரிவிக்க வேண்டும். 3 மாதம் கூட முழுமையடையாத அரசு செய்துள்ள நடவடிக்கைகளை மக்களே அறிவர் என்றும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து செய்யாததை 2 மாதமே ஆகியுள்ள அரசு செய்ய வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் சரியாக இருக்கும் என கேள்வியெழுப்பினார்.

சென்னையில் ஆர்டி பிசிஆர் பரிசோதனைகள் கூடுதலாக மேற்கொள்ளப்படுவதால் தான் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை சற்று அதிகமாக வருகிறது. மேலும், அடுத்த வாரம் கிருஷ்ணகிரியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக கூடுதலாக 1000 செவிலியர்களை நியமனம் செய்ய உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அம்மா கிளினிக் மூலம் எந்த அடித்தட்டு மக்கள் பயன் பெற்றார்கள் என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெயரளவுக்கு மட்டுமே அம்மா கிளினிக் இருந்ததாகவும் சாடியுள்ளார்.

banner

Related Stories

Related Stories