தமிழ்நாடு

ரம்ஜான் பண்டிகைக்கு செல்லாமல் கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்.. குவியும் பாராட்டு!

ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்திற்குக் கூடச் செல்லாமல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ரம்ஜான் பண்டிகைக்கு செல்லாமல் கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்.. குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவர், கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல்களை உறவினர்கள் வாங்க மறுத்துள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, ரம்ஜான் பண்டிகை தினமான நேற்று தொழுகையை மட்டும் முடித்து கொண்டு பேராவூரணி வந்து சடலத்தை, இந்துமத வழக்கப்படி, உரிய மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளனர்.

அதேபோல், கடந்த வாரத்தில் தஞ்சாவூர் மருத்துவமனையில் கொரோனாவால் இறந்த 50 வயது மதிக்கதக்க ஒருவர் சடலத்தையும், பேராவூரணியில் 60வயது மதிக்க தக்க பிரபல மருத்துவர் உடலையும், 12ம் தேதி மாவடுகுறிச்சியில் 55 வயது மதிக்க ஒருவர் சடலத்தையும் அரசின் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்துள்ளனர். இவர்கள் அடக்கம் செய்த அனைவருமே இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் சொந்த உறவினர்களே கொரோனா நோயாளிகளின் சடலத்தை வாங்க தயங்கும் சூழலில், பண்டிகைக் கொண்டாட்டத்தையும் விட்டுவிட்டு இஸ்லாமியர்கள், இந்துகளின் உடலை அடக்கம் செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories