இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டிவரும் கொரோனா தொற்றால் இன்று 13,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 13,776 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,51,487 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 1,22,900 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,14,02,442 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக இன்று சென்னையில் 3,842 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,01,541 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 985 பேருக்கும் கோவை மாவட்டத்தில் 889 பேருக்கும், திருவள்ளூரில் 807 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 39 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 8,078 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,43,044 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 95,048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 78 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 44 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 34 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,395 ஆக அதிகரித்துள்ளது.