தமிழ்நாடு

தேர்வில் சினிமா பாடலை எழுதியதால் கடுமையாகத் திட்டிய ஆசிரியர்கள்... விபரீத முடிவெடுத்த மாணவன்!

போச்சம்பள்ளியில், ஆசிரியர் கிண்டல் செய்ததால் மனமுடைந்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வில் சினிமா பாடலை எழுதியதால் கடுமையாகத் திட்டிய ஆசிரியர்கள்... விபரீத முடிவெடுத்த மாணவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த ஒட்டத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது இளைய மகன் கார்த்திக். இவர் அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தாவரவியல் ஆசிரியர் சகாதேவன் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு வைத்துள்ளார். இந்த தேர்வை எழுதிய கார்த்திக், தெரியாத கேள்விகளுக்குத் திரைப்படப் பாடலை பதிலாக எழுதியுள்ளார். இதையடுத்து, ஆசியர் சகாதேவன், விடைத்தாளைத் திருத்தும்போது கார்த்திக் எழுதிய பாடலை அனைத்து மாணவர்கள் முன்பும் படித்துக் காட்டி கிண்டல் செய்துள்ளார். மேலும், அங்கு வந்த வேதியியல் ஆசிரியர் மயில்வாகனனிடமும் காத்திக் எழுதிய பாடல்களை காட்டி கிண்டல் செய்துள்ளார்.

அப்போது கார்த்திக் இரு ஆசிரியரிடமும் இனிமேல் இதுபோன்று செய்யமாட்டேன் என மன்னிப்பு கோரியுள்ளார். இருந்தும் ஆசிரியர்கள், கார்த்திக்கை கடுமையாக திட்டியுள்ளனர். பெற்றோரை அழைத்துக்கொண்டுதான் இனி பள்ளிக்கு வர வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

தேர்வில் சினிமா பாடலை எழுதியதால் கடுமையாகத் திட்டிய ஆசிரியர்கள்... விபரீத முடிவெடுத்த மாணவன்!

இதையடுத்து, கார்த்திக் அழுதுகொண்டே பள்ளியை விட்டு வெளியேறி, வீட்டிற்கு சென்று உறவினர்களிடம் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். அப்போது, தந்தை வந்ததும் பள்ளிக்கு சென்று பேசிக்கொள்ளலாம் என தாயார் கார்த்திக்கை சமாதானப்படுத்தியுள்ளார். ஆனால் மனமுடைந்த கார்த்திக், நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலிஸார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories