விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது மறைக்குளம் கிராமம். இந்த கிராம மக்களை குரங்கு ஒன்று அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த குரங்கானது தெருவில் வருவோர், போவோரை கடித்து வருவதாகவும், இதுவரை 15க்கும் மேற்பட்ட நாய்களை கடித்துக் குதறி உள்ளதாக இந்த ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், அந்த குரங்கைப் எங்காவது பார்த்தாலே, கிராம மக்கள் துண்டை காணோம் துணியை காணோம் என ஓட்டம் எடுத்துவிடுவார்கள். குரங்கை பிடிக்க வனத்துறையினருக்குக் கிராமத்தினர் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் வனத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கிராமத்தின் பள்ளி சுவர் மீது பாரதி என்ற சிறுவன் அமர்ந்திருந்தான். அப்போது திடீரென அந்த சேட்டை குரங்கு அந்த சுவர் மீது வந்துள்ளது. இதனால், சிறுவன் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே சிலை போல் அமர்ந்திருந்தான். சிறுவன் அருகே வந்த குரங்கு, அவனை அச்சுறுத்தப் பார்த்தது. இருந்தும் சிறுவன் சிலைபோல் அப்படியே அமர்ந்திருந்தார். இதனால் குரங்கு சிறுவனை அசைத்தும், முத்தம் கொடுத்தும் என பல விதங்களில் அசைக்க முயற்சி செய்தது.
இப்படியாக 7 நிமிடங்கள் சிறுவனை அசைக்க முயற்சி செய்த குரங்கு, கடைசியில் தோல்வியை தழுவி அங்கிருந்து நடையைக் கட்டியது. இதனை பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு நபர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.