தமிழ்நாடு

“ரூ.3,150 கோடி சூயஸ் ஒப்பந்தத்தின் நிலை என்ன? குடிநீரை வணிகமாக்க முயற்சியா?” - தி.மு.க MLA சரமாரி கேள்வி!

அம்ரூட் திட்டத்தில் சுமார் 595 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்ட குடிநீர் விநியோக திட்டம், எப்படி 3,150 கோடி ரூபாய் ஆனது? இதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?

“ரூ.3,150 கோடி சூயஸ் ஒப்பந்தத்தின் நிலை என்ன? குடிநீரை வணிகமாக்க முயற்சியா?” - தி.மு.க MLA சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகள் ஆகியும், ஒப்பந்தத்தில் உள்ள பணிகள் குறித்த விபரங்களை மக்கள் சபையில் இதுவரையிலும் வெளியிடாமல் ரகசியமாக வைத்திருப்பதின் பின்னணி என்ன என்று கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பான அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:

“கோவை மாநகராட்சியில் 2018-19ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் 24 மணிநேரமும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அம்ரூட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 125 எம்.எல்.டி, சிறுவாணி குடிநீர் திட்டத்தின்படி நாளொன்றுக்கு 75 எம்.எல்.டி என மொத்தம் 200 எம்.எல்.டி குடிநீர் 24 மணி நேரமும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தரை மட்ட நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் நீர் உந்து நிலையங்கள், 29 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 1470 கி.மீ நீளத்திற்கு குடிநீர் பகிர்மான குழாய்கள் அமைக்கப்படும் என்றும், இத்திட்டம் ஜெ.என்.என்.யூ.ஆர்.எம் திட்டத்தில் இருந்து அம்ரூட் திட்டத்திற்கு மாற்றப்பட்டு சுமார் 595 கோடி ரூபாயில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

“ரூ.3,150 கோடி சூயஸ் ஒப்பந்தத்தின் நிலை என்ன? குடிநீரை வணிகமாக்க முயற்சியா?” - தி.மு.க MLA சரமாரி கேள்வி!

இதனை நடைமுறைப் படுத்துவதற்குத்தான் தனியார் பங்களிப்பு என்ற பெயரில் சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோகிக்கும் உரிமத்தை 26 ஆண்டுகளுக்கு வழங்கி 24.11.2017 ல் பணி அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் “ என்ன மாயம் நடந்ததோ? ஏது நடந்ததோ? “ கோவை மாநகராட்சி நிர்வாகம், சுமார் 595 கோடி ரூபாயில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்ட அந்த திட்டத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஒப்புதலோடு புதுப்பித்து, கடந்த 08.01.2018 அன்று மாநகராட்சியில் உள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு, 26 ஆண்டுகளுக்கு, ரூ.3 ஆயிரத்து 150 கோடிக்கு பல்வேறு விமர்சனங்களுக்கு, குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு தான்தோன்றித்தனமாக வழங்கியது.

இந்த 595 கோடி ரூபாய் திட்டம் எப்படி 3,150 கோடி ரூபாய் ஆனது என்பது குறித்த மர்மம் யாருக்கும் தெரியாது. உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லாத நிலையில், மக்களின் சார்பில் எந்த கருத்துருவும் மேற்கொள்ளப்படாமல் அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் ஏற்பாட்டில் இந்த மக்கள் விரோத ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பு வெளியான உடன் கடந்த 25.06.2018 அன்று தி.மு.கழக தலைவர் 26 ஆண்டு காலம் தனியார் நிறுவனத்திற்கு குடிநீர் பராமரிப்பு ஒப்பந்தம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடுமையாக ஆட்சேபனை தெரிவித்து, தமிழக அரசையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் வன்மையாகக் கண்டித்தார்.

“ரூ.3,150 கோடி சூயஸ் ஒப்பந்தத்தின் நிலை என்ன? குடிநீரை வணிகமாக்க முயற்சியா?” - தி.மு.க MLA சரமாரி கேள்வி!

கோவையில் இருக்கக்கூடிய அனைத்துத் தரப்பு மக்களும் கொந்தளித்து தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்த வண்ணம் இருந்தனர். அது மட்டுமின்றி கோவையில், தி.மு.க மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பிலும், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கடந்த 06.07.2018 ,19.06.2019, 27.08.19 , 10-10-2019, 28-11-2019 ஆகிய தேதிகளில், பல கட்ட அறவழிப் போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனாலும் கோவை மாநகராட்சி நிர்வாகம், மக்களின் எதிர்ப்பை புறந்தள்ளி விட்டு, தொடர்ந்து இத்திட்டத்தை செயல் படுத்தி வருகிறது.

எல்லா உயிர்களுக்கும் அடிப்படை தேவையான தண்ணீர் பகிர்வு என்பது இலாப நோக்கம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பதை மக்களின் நல வாழ்வை பேண வேண்டிய அரசு செய்யலாகாது. மேலும், எந்த காரணத்திற்காக இந்த சேவை தனியார்மயப்படுத்த வேண்டுமென வாதாடப்படுகிறதோ, உலக நாட்டு அனுபவங்களும், அண்டை மாநில அனுபவங்களும் அவற்றை மெய்ப்பிக்கவில்லை.

இந்த ஒப்பந்தம் போடப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகள் ஆகியும் , ஒப்பந்தத்தின் படி, கோவையில் தரை மட்ட நீர்த்தேக்க தொட்டிகள் , நீர் உந்து நிலையங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைப்பது உள்ளிட்ட சூயஸ் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் எங்காவது நடைபெறுகிறதா? இன்றுவரை குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் பணிகள் கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே உள்ளது.

கோவை மாநகரில் உள்ள பல சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனால் பல சாலைகள் குண்டும் – குழியுமாக, போக்குவரத்திற்கு பயனற்ற சாலைகளாக மாறிவிட்டது. பல இடங்களில் இந்தக் குழிகள் மரணக் குழிகளாக காட்சி அளிக்கின்றன.

“ரூ.3,150 கோடி சூயஸ் ஒப்பந்தத்தின் நிலை என்ன? குடிநீரை வணிகமாக்க முயற்சியா?” - தி.மு.க MLA சரமாரி கேள்வி!

பல இடங்களில் குழாய்கள் பதிக்க, குழிகள் தோண்டும்போது, தற்பொழுது இருக்கும் குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு , குடிநீர் விநியோகம் தடைபட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். உடைந்த குடிநீர் குழாய்களை பொருத்துவதற்கு மாநகராட்சி அதிகாரிகளிடத்தில் மாதக்கணக்கில் நடையாக நடக்க வேண்டியுள்ளது.

இந்த சூயஸ் நிறுவன பணியாளர்களின் நிர்வாக குளறுபடிகளால், மாநகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகத்தில் பலத்த பின்னடைவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சரியான முறையில் செய்யாமல் இருப்பதால் குடிப்பதற்குக் கூட குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் தவித்து வருகிறார்கள்.

மக்களின் வரிப் பணத்தில் , மக்களின் எதிர்ப்பையும் மீறி , ரூ. 3 ஆயிரத்து 150 கோடிக்கு மக்கள் விரோத ஒப்பந்தம் போட்டும், அத்தனையும் தற்போது “விழலுக்கு இறைத்த நீராகவே” உள்ளது. மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த ஒரு உபயோகமும் , முன்னேற்றமும் இல்லை. இது கோவையில் உள்ள மக்களுக்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் செய்யும் மிகப் பெரிய துரோகம்.

மக்களின் வரிப்பணத்தில், அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் அதனால் மக்களுக்கு பயன் கிடைக்க வேண்டுமே தவிர இடையூறும், பின்னடைவும் ஏற்படக் கூடாது. இந்த சூயஸ் நிறுவன ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும், மக்களின் இந்த கேள்விகளுக்கெல்லாம மக்கள் சபையில் பதிலளிக்கக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்று எச்சரிக்கிறேன்.

“ரூ.3,150 கோடி சூயஸ் ஒப்பந்தத்தின் நிலை என்ன? குடிநீரை வணிகமாக்க முயற்சியா?” - தி.மு.க MLA சரமாரி கேள்வி!

லாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனத்திடம் இத்திட்டத்தை கொடுப்பதால் தண்ணீருக்கான கட்டணத்தை மாநகராட்சி கட்டுப்படுத்த முடியுமா? குடிநீரை வணிகமாக்குவதுதான் அரசின் திட்டமா?

குடிமக்களுக்கு அரசு செய்து தர வேண்டிய அடிப்படை தேவைகளில் ஒன்று குடிநீர். அந்த குடிநீரை விநியோகிக்கும் வேலையைக் கூட செய்யமுடியாத கையாலாகாத அரசாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தமிழக உள்ளாட்சித் துறையும் , எடப்பாடி பழனிசாமி அரசும் மாறியிருக்கிறது

ஆகவே கோவை மாநகராட்சி நிர்வாகம், வெளிநாட்டு தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்தோடு 26 ஆண்டுகளுக்கு, ரூ. 3 ஆயிரத்து 150 கோடிக்கு போட்ட மக்கள் விரோத ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும், சூயஸ் ஒப்பந்த பணிகள் குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இல்லை என்றால், சமூக இடைவெளியோடு, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, மக்களோடு இணைந்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” என எச்சரித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories