தமிழ்நாடு

“தேவையற்ற பணிகளில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் கோவை மாநகராட்சி” - தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

திட்டப் பணிகள் என்ற பெயரில் தேவையற்ற இடங்களில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருவதாக தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.

“தேவையற்ற பணிகளில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் கோவை மாநகராட்சி” - தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அடிப்படை சுகாதார பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் திட்டப் பணிகள் என்ற பெயரில் தேவையற்ற இடங்களில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருவதாக தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் ராஜ வாய்க்கால், நொய்யல் ஆறு உள்ளிட்ட அனைத்து நீர்நிலை, ஓடை, மழைநீர் வடிகால்களில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து அடைத்துக்கொண்டுள்ளதால், நீர் ஆங்காங்கே தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களின் புகார்களின் பேரில் மேற்கண்ட பகுதிகளைப் பார்வையிட்ட தி.மு.கவின் கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏவுமான கார்த்திக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நீர்நிலை, வடிகால்கள் சுகாதாரக்கேடு குறித்து கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து கோவை மாநகராட்சி ஆணையரிடத்தில் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளேன். இதுவரை எதுவுமே சுத்தம் செய்யப்படவில்லை. நொய்யல் குளங்களுக்குச் செல்லும் ராஜ வாய்க்கால் உள்ளிட்ட அனைத்து நீர்வழித் தடங்களும், மழைநீர் வடிகால்களும் தூர்வாரப்படுவதில்லை. இதனால் பல்வேறு நோய்களைப் பரப்புகின்ற இருப்பிடமாக, சுகாதாரச் சீர்கேட்டின் ஒட்டுமொத்த இருப்பிடமாக கோவை மாநகராட்சிப் பகுதிகள் இருக்கின்றன.

கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ரூ.377 கோடி நிதி ஒதுக்கி, தொடங்கி வைக்கப்பட்ட பாதாளச் சாக்கடைக் கட்டுமானப் பணிகள் பிறகு வந்த அ.தி.மு.க ஆட்சியில், சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தாலும், நிர்வாகச் சீர்கேடுகளாலும் கடந்த 11 ஆண்டு காலமாக முடிக்கப்படாமல் இழுபறியில் உள்ளது.

பல சாலைகள், பாதாளச் சாக்கடைக் கட்டுமானப் பணிகளுக்காகத் தாறுமாறாகத் தோண்டப்பட்டு, மிகவும் பழுதடைந்து, பொதுமக்கள், வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாக, பயனற்ற வகையில் விபத்தை ஏற்படுத்தும் மரணக் குழிகளாக உள்ளன. மழைக்காலங்களில் இந்தச் சாலைகளில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது. இதனால் பல பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

மேற்கண்ட அடிப்படைப் பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டிய அரசுத்துறை, மக்களுக்கு முதல் தேவையான சுகாதார, அடிப்படைப் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாமல் திட்டப் பணிகள் என்ற பெயரில் தேவையற்ற இடங்களில், மக்களின் வரிப்பணத்தை, பினாமி ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கி, அதில் முறைகேடுகள் செய்வதில் மட்டும்தான் முன்னுரிமை தந்து வருகிறது. இதற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால், பொதுமக்களின் அல்லல்கள் பெருக்கெடுத்துள்ளன. அதை மனதில் நிறுத்தியாவது கோவை மாநகராட்சி நிர்வாகம், போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களைத் திரட்டி, மாபெரும் அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories