தமிழ்நாடு

கருங்காலக்குடியில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு: மதுரை மக்களுக்கு கிடைத்த பரிசு-சு.வெங்கடேசன் பெருமிதம்!

தொடர் விபத்துகளை தடுக்கும் விதமாக மதுரை கருங்காலக்குடியில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

கருங்காலக்குடியில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு: மதுரை மக்களுக்கு கிடைத்த பரிசு-சு.வெங்கடேசன் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கருங்காலக்குடி மேம்பாலம் கட்ட ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மதுரை மக்களவைத் தொகுதி மக்களுக்கு கிட்டிய தீபாவளி பரிசு என சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.

இதுதொடர்பான அவரது அறிக்கையில், “மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கருங்காலக்குடி பகுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் சாலை விபத்துகளை தடுப்பதற்காக பாலம் அமைக்கப்படும் என்றும் அதற்காக ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் நிதின் கட்கரி எனக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இது மேலூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. எங்களின் தேர்தல் வாக்குறுதியும் கூட. அவ்வாக்குறுதி விரைவில் நிறைவேறும் வகையில் ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணி விரைவில் துவங்கும் என்கிற மகிழ்வான செய்தி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதத்தில் பகிரப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் பொழுதே அப்பகுதி மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற பிறகு என் தரப்பில் இப்பிரச்சினையில் கூடுதல் அக்கறை செலுத்தப்பட்டு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடிதம் வாயிலாகவும் நேரிலும் அமைச்சரின் கவனத்துக்கு இக்கோரிக்கையை கொண்டுசென்றேன். அதன் விளைவாக கடந்த ஜனவரி மாதம் ஆய்வு மேற்கொண்டு தொடர் விபத்து நடக்கும் பகுதி என்பதையும் தவிர்ப்பதற்கான ஏற்பாடு தேவை என்பதையும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஏற்றுக் கொள்ளுமாறு முயற்சி மேற்கொண்டு வெற்றி கிட்டியது.

கருங்காலக்குடியில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு: மதுரை மக்களுக்கு கிடைத்த பரிசு-சு.வெங்கடேசன் பெருமிதம்!

பிறகு பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. கோவிட் பெருந்தொற்றுக்காக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்திற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி கருங்காலக்குடி பாலம் தொடர்பாக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சருக்கு மீண்டும் கடிதம் எழுதி, நேரிலும் வலியுறுத்தினேன். நவம்பர் 6 ஆம் தேதி அதற்கு பதில் அனுப்பியுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருங்காலக்குடியில் சாலை விபத்தினை தவிர்க்க வாகனங்கள் செல்ல சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்றும் இதற்கு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை காலத்தில் பெறப்பட்ட இத்தகவல் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மேலூர் தொகுதி மக்களுக்கான பரிசு மட்டுமல்ல; மதுரை - திருச்சி நெடுச்சாலையில் பயணிக்கும் அனைவருக்கும் கிட்டிய பரிசு எனக் கருதி இம்மகிழ்ச்சியான செய்தியினை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories