தமிழ்நாடு

கோவிட் நோயாளிகளுக்கு இட்லி,ஊத்தப்பம்,மீல்ஸ்: இதுவா ரூ.25 கோடி? உண்மையான மதிப்பு எங்கே - முத்தரசன் கேள்வி!

கொரோனா நோயாளிகளுக்கு அரசுத் தரப்பில் இருந்து வழங்கப்படும் உணவுகளின் விலை மதிப்பை வெளியிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார் முத்தரசன்.

கோவிட் நோயாளிகளுக்கு இட்லி,ஊத்தப்பம்,மீல்ஸ்: இதுவா ரூ.25 கோடி? உண்மையான மதிப்பு எங்கே - முத்தரசன் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா சிகிச்சை பெறுவோருக்கு வழங்கப்படும் உணவு குறித்த விலை மதிப்பை வெளியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு தயாரிக்க தினசரி 25 கோடி ரூபாய் வரை செலவாகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்றில் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம், குறிப்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் சிகைச்சை பெற்று வருபவர்களிடம் கேட்டறிந்த வகையில் முதலமைச்சரின் கணக்கின் மீது ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.

கோவிட் நோயாளிகளுக்கு இட்லி,ஊத்தப்பம்,மீல்ஸ்: இதுவா ரூ.25 கோடி? உண்மையான மதிப்பு எங்கே - முத்தரசன் கேள்வி!

ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் காலையில் 2 இட்லி, ஒரு சிறிய ஊத்தப்பம், மதியம் காய்கறி கூட்டு, சிறிது சாம்பார், சிறுசிறு அப்பளம் ஆகியவை உள்ளடங்கிய அளவு சாதம், இரவு மீண்டும் 2 இட்லி, சிறிய உத்தப்பம் ஒன்று என வழங்கப்படுவதாகத் தெரிகிறது.

வேறு சில பகுதிகளில் முட்டையும், பாலும் கூடுதலாக வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். இவை அனைத்தையும் சேர்த்துக் கணக்கிட்டாலும் முதலமைச்சரின் கணக்கு, பொருந்தாக் கணக்காகவே வருகிறது.

கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கையில் நிதித் தவறுகளும், ஊழலும் நடைபெறுவதாக புகார்களும் எழுந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் கொரோனா சிகிச்சை பெறுவோருக்கு, வழங்கப்படும் உணவு விபரங்கள், அதன் விலை மதிப்பு ஆகியவற்றை தெளிவாக பட்டியலிட்டு, பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறது.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories