தமிழ்நாடு

கொலைகார அரசுக்காகக் குரைப்பதை நிறுத்தி வாலைச் சுருட்டிக் கொள்ளவும் -ராஜேந்திர பாலாஜிக்கு திமுக MLA பதிலடி

நெஞ்சுவலியாலும், மூச்சுத்திணறி இறந்தவர்களுக்கும் மக்கள் வரிப்பணத்திலான முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்ச ரூபாய் வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது?

கொலைகார அரசுக்காகக் குரைப்பதை நிறுத்தி வாலைச் சுருட்டிக் கொள்ளவும் -ராஜேந்திர பாலாஜிக்கு திமுக MLA பதிலடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"கொலைகார அரசுக்காகக் குரைப்பதை நிறுத்தி, வாலைச் சுருட்டிக் கொள்ளுங்கள்!" என அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. சவுக்கடி பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

“எலும்புத்துண்டு போல மாவட்டச் செயலாளர் பதவி மீண்டும் கிடைத்திருக்கும் நிலையில், பதவி கொடுத்தவர்களுக்கு ராஜேந்திர பாலாஜி நன்றிகாட்டி வாலாட்டிக் கொள்ளட்டும். தேவையின்றி, எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்துக் குரைப்பது, எதைக் குளிப்பாட்டி எங்கே வைத்தாலும் அதன் குணம் மாறாது என்பதையே காட்டுகிறது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற இரட்டை உயிர்ப்பறிப்பு கொடூரத்துக்குத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுவதுமிருந்து கண்டனம் வெளிப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் சமூக வலைதளங்களில் காணொலியாகத் தங்களின் எதிர்ப்புக் குரலை அழுத்தமாகப் பதிவு செய்து வருகிறார்கள். காவல்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகளேகூட, இந்தக் கொடூரத்தை அனுமதிக்க முடியாது எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

‘கொரோனா பரப்பி’ எடப்பாடி பழனிசாமி அரசு, இந்த ஊரடங்கு காலத்திலும் டாஸ்மாக் கடையைத் திறந்து வைப்பது தங்களின் ‘கொள்கை முடிவு’ என உச்சநீதிமன்றம்வரை சென்று, அந்தக் கொள்கையின் காரணமாக, 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழக மக்களுக்கு கொரோனாவைப் பரப்பி, ஆயிரத்திற்கும் அதிகமானோரின் உயிரைப் பறித்திருக்கிற நிலையில், தங்களின் வாழ்வாதாரத்திற்காகக் கடை திறந்து வைத்த அப்பாவையும் மகனையும் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து மரணத்தில் தள்ளிய காவல் துறையினரைக் காப்பாற்றுவதற்கு இன்றளவும் மறைமுகமாகத் துணை போய்க் கொண்டிருக்கிறது.

கொலைகார அரசுக்காகக் குரைப்பதை நிறுத்தி வாலைச் சுருட்டிக் கொள்ளவும் -ராஜேந்திர பாலாஜிக்கு திமுக MLA பதிலடி

அதனைத் திசைதிருப்புவதற்காக, தற்காலிகமாக மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் பெற்றிருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அ.தி.மு.க. அரசு 'அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருந்துகொண்டு ஆட்சி செய்வதுபோல', நீதிமன்றம் பாராட்டிவிட்டது, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது, சி.பி.சி.ஐ.டி. நடவடிக்கையில் காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் புண்ணுக்கு புனுகு தடவும் வேலையை மேற்கொண்டிருக்கிறார்.

நீதி, இந்த ஆட்சியின் முகத்தில் காறித் துப்பியது. அப்போதும் சுரணையின்றி அதனைத் துடைத்துக் கொண்டு, இப்போதுதான் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறீர்கள். அதுவும், எத்தனை நாட்கள் கழித்து? ஒரு வழக்கின் ஆரம்பத்தில் முழு உண்மையும் தெரிந்துவிடாது என்று முதலமைச்சருக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை விட்டிருக்கும் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது அறிக்கையிலேயே தன்னையும் அறியாமல் உண்மைகளை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

முழு உண்மையும் தெரியாத நிலையில், அப்பா - மகன் இருவரில் ஒருவர் நெஞ்சுவலியால் இறந்தார் என்றும், இன்னொருவர் மூச்சுத்திணறி இறந்தார் என்றும் முதலமைச்சரே முடிவு செய்து அறிக்கை வெளியிட்டது எப்படி?

காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரின் லட்சணம் இதுதானா? முதலமைச்சரின் லட்சணமே இதுதான் என்றால், அவரிடம் நத்திப் பிழைக்கும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் லட்சணம் எப்படி இருக்கும்?

நெஞ்சுவலியாலும், மூச்சுத்திணறி இறந்தவர்களுக்கும் மக்கள் வரிப்பணத்திலான முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்ச ரூபாய் வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது?

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் மூச்சுத்திணறியும் நெஞ்சுவலியாலும் இறக்கின்றவர்களுக்கு முதலமைச்சர் இதுவரை எவ்வளவு நிதி வழங்கியிருக்கிறார்?

வழக்கின் ஆரம்பக் கட்டத்தில் முழு உண்மை தெரியாது என்கிறபோது, உங்களைப் போலவே உளறிக்கொட்டும் இன்னொரு அமைச்சரான கடம்பூர் ராஜூ, “இது லாக்கப் மரணமில்லை” என்று தன் ‘முடிவை’ அறிவித்தது எப்படி? ஆணவமா? அல்லது அமைச்சரவையில் உள்ள அத்தனை பேருமே உங்களைப் போன்ற அரைவேக்காடுகளா?

கொலைகார அரசுக்காகக் குரைப்பதை நிறுத்தி வாலைச் சுருட்டிக் கொள்ளவும் -ராஜேந்திர பாலாஜிக்கு திமுக MLA பதிலடி

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தன்னிச்சையாக விசாரித்து உத்தரவிட்டதன் பேரிலேயே தற்போதைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய விசாரணை நடைபெற்று, குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், வணிகர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் எல்லாரும் குரல் கொடுப்பது உங்களுக்கு அரசியலாகத் தெரிகிறது என்றால், உங்கள் அரசியல் என்பது மக்களின் நியாயத்திற்கானதாக இல்லை. நாளும் பொழுதும் ‘கல்லா’ கட்டி, அரசு நிர்வாகத்திற்கு ‘பால்’ ஊற்றுவதுதான் உங்களின் முழு நேர அரசியலா?

தூத்துக்குடியில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானால், காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் டி.வி.,யைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்கிறார். நீரோ மன்னனுக்கும் இந்த 'மண்புழு முதல்வருக்கும்' என்ன வித்தியாசம்? முதலமைச்சர் வழியிலேயே மற்ற அமைச்சர்களும் மமதையுடன் இருப்பதால் மக்களின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்படுகிறது.

இதை எடுத்துச் சொல்ல வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. மக்கள் செல்வாக்கு மிக்கவரும் - தேர்தல் களத்தில் தி.மு.க.,வுக்கு மகத்தான வெற்றியை ஈட்டித்தந்தவருமான எங்கள் கழகத் தலைவரும் - மக்கள் போற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான தலைவர் தளபதி அவர்கள் ஆதாரப்பூர்வமாக விடுக்கும் அறிக்கைக்குப் பதில் சொல்ல வக்கின்றி வகையின்றி அவதூறுகளை அள்ளி வீசுவது கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி, அவருடன் மாவட்ட அரசியலில் மல்லுக்கட்டுகின்ற மாஃபா பாண்டியராஜன் வரை எல்லோருக்கும் வழக்கமாக இருக்கிறது.

சேற்றில் ஊறிய பன்றிகள் தெருவில் வந்தால், மக்கள் ஒதுங்கிச் செல்வார்கள். அதுபோலத்தான் இந்த அவதூறுச் சேற்றில் ஊறியவர்களின் அறிக்கைகளை நாங்கள் பார்க்கிறோம்.

அதிகம் பேசிக் கொண்டிருந்தால் ஜெயலலிதாவிடம் ஆடிட்டர் வாங்கிய செருப்படியிலிருந்து, போயஸ் கார்டனில் இன்றைய முதல்வர் - துணை முதல்வருக்குக் கிடைத்த சிறப்புப் பூசைகள் வரை பட்டியலிட வேண்டியிருக்கும். முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து, ஜெயலலிதாவின் மர்ம மரணம் வரை கல்லறையைத் தோண்ட வேண்டியிருக்கும். தாங்கமாட்டீர்கள்!

தி.மு.கழகம் நீதியை நம்புகிற - எதிர்கொள்கிற இயக்கம். வாய்தா வாங்கி காலத்தை ஓட்டிய வரலாறு எங்களுக்கு கிடையாது. நேருக்கு நேராக எதிர்கொண்டு, பொய் வழக்குகளைப் பொடிப்பொடியாக்கியவர்கள். ஆனால், அ.தி.மு.க. என்பது ஊழலுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, முதல்வர் பதவி பறிக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கே அகில இந்திய அளவில் அவமானத்தைத் தேடித்தந்த இயக்கம்.

அப்போது நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக, ஆளுங்கட்சியினர் வரிந்துகட்டி நின்று, அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, போக்குவரத்தை முடக்கி, கடையடைப்பு - கலவரங்களை உருவாக்கி, தீர்ப்பளித்த நீதிபதியின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் இழிவு ஏற்படுத்திய கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் முதலமைச்சரில் தொடங்கி அவருக்கு வாலாட்டும் ராஜேந்திர பாலாஜி வரையிலான அத்தனை பேரும்.

அதன்வழியில்தான், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விசாரித்த மாஜிஸ்ட்ரேட்டை எடப்பாடி அரசின் ஏவல்துறையான காவல் துறையினர் மிரட்டியிருக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

நீதித்துறை நடுவரிடம் உண்மையைச் சொன்ன பெண் தலைமைக் காவலர் உயிர் பயத்தில் இருப்பதையும், ஒரு காவலருக்கே போலீஸ்காரர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டிய அளவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதையும் தமிழகம் இதுவரை கண்டதில்லை. அந்த அளவுக்கு கொலைகார அரசாங்கத்தின் ஆட்சியில் தமிழகம் சிக்கியிருக்கிறது.

மக்களின் கோபத்திற்கும் கொந்தளிப்புக்கும் அவர்கள் கேட்கும் நியாயத்திற்கும் பதில் சொல்லத் திராணியின்றி, எங்கள் தலைவரை நோக்கிக் குரைக்க வேண்டாம். வாலைச் சுருட்டிக் கொள்ளுங்கள் ராஜேந்திர பாலாஜி. நறுக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories