தமிழகத்தில் கொரோனாவால் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1000க்கும் அதிகமாகவே பதிவாகி வருகிறது. இருப்பினும் அதிமுக அரசோ, தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள்ளேயே இருக்கிறது என வாய்ச்சவடால் விட்டு வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் ஒருவன் தனக்கு காய்ச்சல் ஏற்பட்ட காரணத்தால் அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறான்.
அப்போது, காய்ச்சல் என்றதுமே அங்கிருந்த மருத்துவர் அந்த சிறுவனை பத்து அடி தொலைவில் நிற்க வைத்து உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்தே டார்ச் அடித்து பார்த்துவிட்டு, மருந்து மாத்திரையை கொடுத்திருக்கிறார்.
இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளத்தில் பதிவேற்றியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ நெட்டிசன்கள் இடையே வட்டமடித்து வருகிறது. மேலும், காய்ச்சல் என்றதும் முறையாக சிகிச்சை அளிக்காமல் மருத்துவரே இவ்வாறு செயல்பட்டது பெரும் அதிர்ச்சியையும், விமர்சனத்துக்கும் உண்டாகியுள்ளது.
கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் வேளையில், மக்களுக்கு சாதாரண காய்ச்சல், சளி, இருமல் எதுவாக இருந்தாலும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கோ ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.
ஆனால், கள நிலவரமோ காய்ச்சல் இருமல் என சென்றாலே பத்தடி தொலைவுக்கு நோயாளிகளை நிற்க வைக்கும் வகையில் உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு சீரிய நடவடிக்கை மேற்கொண்டும், இனி மக்களுக்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் உத்தரவிடவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.