தமிழ்நாடு

"விவசாயிகள் இடம்பெறாவிட்டால் அது ஆளும்கட்சியின் கமிட்டியாகவே செயல்படும்” - விவசாய சங்கத்தினர் அறிக்கை!

“பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டுமென்றால் எண்ணெய், எரிவாயு எடுப்பது தடை செய்யப்படவேண்டும்” என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

"விவசாயிகள் இடம்பெறாவிட்டால் அது ஆளும்கட்சியின் கமிட்டியாகவே செயல்படும்” - விவசாய சங்கத்தினர் அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டுமென்றால் எண்ணெய், எரிவாயு எடுப்பது உட்பட தடை செய்யப்பட்டு, முழுமையான விவசாய பகுதியாக மாற்றப்பட வேண்டும்” என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், “காவிரி படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட வேளாண்மையை, சுற்றுசூழலை பாதிக்கக்கூடிய திட்டங்களை தடை செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து போராடி வந்தன. இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் அவர்கள் பிப்ரவரி 9ந் தேதி எட்டு மாவட்டங்களை குறிப்பிட்டு பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கான சட்டமும் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். இன்று (பிப்ரவரி 20) தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் என்ற பெயரில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற வகையில் ஒரு சட்டப்பாதுகாப்பை இதன் மூலம் உறுதிப்படுத்தியிருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.

"விவசாயிகள் இடம்பெறாவிட்டால் அது ஆளும்கட்சியின் கமிட்டியாகவே செயல்படும்” - விவசாய சங்கத்தினர் அறிக்கை!

அதேநேரத்தில், பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதில் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட காவிரி பாசனப் பகுதிகளான லால்குடி, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட திருமானூர், டி.பழூர், கரூர் மாவட்டம் குளித்தலை, ஆகிய தாலுக்காக்கள் இணைக்கப்பட்டால் தான் காவிரி டெல்டா பகுதி முழுமையாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியாக ஆகும். எனவே மேற்கண்ட பகுதிகளை இணைக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.

இதற்கென்று அறிவிக்கப்பட்டுள்ள மாநில அளவிலான கமிட்டி, மற்றும் மாவட்ட அளவிலான கமிட்டிகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளே மிக அதிக எண்ணிக்கையில் இடம்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. இது ஆளும்கட்சியின் கமிட்டியாக செயல்படவே வழிவகுக்கும். எனவே, விவசாய சங்கப் பிரதிநிதிகள், வேளாண்மை மற்றும் பாசனம் தொடர்பான அறிஞர் பெருமக்கள் அதிக அளவில் இடம் பெறும் வகையில் இக்கமிட்டி மாற்றி அமைக்கப்பட வேண்டும். விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதியும் இதில் இடம் பெறுவது அவசியம் என்பதை வலியுறுத்துகிறோம்.

பழைய திட்டங்கள் தொடரும் என்று அறிவித்திருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. காவிரி டெல்டா முழுமையான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டுமென்றால் எண்ணெய், எரிவாயு எடுப்பது உட்பட தடை செய்யப்பட்டு, முழுமையான விவசாய பகுதியாக மாற்றப்பட வேண்டுமென்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட அம்சங்கள் உட்பட சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories