தனியார் முதலீடுகள் மற்றும் பங்குகளின் பரிவர்த்தனையால் அதிக லாபம் பெற்று வந்த தமிழகம் தற்போது தனியார் பங்கு முதலீட்டுத் துறையில் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
குறிப்பாக, தனியார் முதலீடுகளில் ஒப்பந்தங்கள் 47 ஆகச் சரிந்துள்ளன. இது கடந்த ஆண்டுகளில் 64 ஒப்பந்தங்களாக இருந்தது. அதுமட்டுமின்றி, 2,340 மில்லியன் டாலர் மதிப்பில் இருந்த முதலீடுகள் 1,531 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
அதேபோல், ஏஞ்சல் முதலீடுகள் கடந்தாண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு 19 ஏஞ்சல் முதலீடுகளை கொண்டிருந்தது தமிழகம். அதுவே 2019-ம் ஆண்டில் 14 ஆகக் குறைந்துள்ளது.
இதனால் தனியார் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க அரசின் நிர்வாகக் கோளாறே இத்தகைய முதலீட்டு வீழ்ச்சிக்குக் காரணம் எனப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தச் செய்தியை சுட்டிக்காட்டி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், “2019ம் ஆண்டில் தமிழ்நாடு 34.57 சதவீத தனியார் முதலீடுகளை இழந்திருப்பது, அ.தி.மு.க ஆட்சி நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடுகளின் தோல்வியையும், லட்சணத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
ஊழலின் உருவமான அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால் புதிய முதலீடுகள், புதிய தொழிற்சாலைகள் மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களும் தமிழ்நாட்டின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்பது வேதனை தருகிறது.
இதனால் தொழில் வளர்ச்சி மட்டுமின்றி - மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் அ.தி.மு.க ஆட்சியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ‘என்று மறையும் அ.தி.மு.க ஆட்சியின் இந்த இருண்ட அத்தியாயம்?’ என்பதுதான் வேலை வாய்ப்புகள் இன்றித் தவிக்கும் தமிழக இளைஞர்களின் இன்றைய ஏக்கமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.