இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் முதலீடு கடந்த 2019-ம் ஆண்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு 37 பில்லியன் டாலராக உயர்ந்தாலும், தமிழ்நாட்டில் செய்யும் முதலீடுகளில் 34.57% குறைந்துள்ளன.
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் எதிர்பார்த்த அளவை விடக் குறைந்துள்ளது.
இதனால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்தியாவில் முதலீடு செய்ய அஞ்சுவதாக அண்மையில் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், தனியார் முதலீடுடுகள் மற்றும் பங்குகளின் பரிவர்த்தனையால் அதிக லாபம் பெற்று வந்த தமிழகம் தற்போது தனியார் பங்கு முதலீட்டுத் துறையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
குறிப்பாக, தனியார் முதலீடுகளில் ஒப்பந்தங்கள் 47 ஆகச் சரிந்துள்ளன. இது கடந்த ஆண்டுகளில் 64 ஒப்பந்தங்களாக இருந்தது. அதுமட்டுமின்றி, 2,340 மில்லியன் டாலர் மதிப்பில் இருந்த முதலீடுகள் 1,531 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
அதேபோல், ஏஞ்சல் முதலீடுகள் கடந்தாண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு 19 ஏஞ்சல் முதலீடுகளை கொண்டிருந்தது தமிழகம். அதுவே 2019-ம் ஆண்டில் 14 ஆகக் குறைந்துள்ளது. இதனால் தனியார் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் தனியார் பங்கு முதலீடு குறைந்தது குறித்து தனியார் நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் மற்றும் மதிப்பீடுகளை ஆய்வு செய்யும் வென்சர் இன்டலிஜன்ஸ் நிறுவனம் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 2018-ம் ஆண்டு 19 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதுவே 2019ல் குறைந்து 14 ஒப்பந்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும் வென்சர் இன்டலிஜென்ஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் அருண் நடராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “தமிழகத்தில் கடந்த ஒருவருடத்தில் தனியார் பங்கு முதலீடுகள் குறைந்தது மற்ற முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநிலம் என்ற சிறப்பு இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஒப்பந்தங்கள் சரிவால் அந்த இடத்தை இழந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் தனியார் முதலீடுகள் குறைந்துள்ளது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.