தமிழ்நாடு

32 ஆண்டுகளுக்குப் பிறகு பரோலில் வெளியே வருகிறார் வீரப்பனின் அண்ணன் மாதையன் - உயர்நீதிமன்றம் அனுமதி!

வீரப்பனின் அண்ணன் மாதையனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

32 ஆண்டுகளுக்குப் பிறகு பரோலில் வெளியே வருகிறார் வீரப்பனின் அண்ணன் மாதையன் - உயர்நீதிமன்றம் அனுமதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன். இவர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதியாக கோவை மாவட்ட சிறையில் உள்ளார். இந்நிலையில் மாதையனின் மனைவி மாரியம்மாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மகள் ஜெயம்மாள் வீட்டில் வசித்து வருகிறார்.

மனைவியைப் பார்க்க ஒருமாதம் பரோல் வேண்டும் என்று அரசுக்கு மாதையன் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் கோரிக்கை பரிசீலிக்கப்படாததால், அவரது மகள் ஜெயம்மாள் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “1987-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் என் தந்தை ஆயுள் தண்டனை பெற்றார். 32 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அவருக்கு முன்கூட்டிய விடுதலைக்கு அனுமதி இருந்தும் அரசு விடுதலை செய்யவில்லை. இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், என் தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரைப் பார்க்க என் தந்தைக்கு 30 நாட்கள் பரோல் வழங்கவேண்டும்” எனக் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆதாரத்தைக் கொண்டு, மாதையனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க அனுமதி அளித்தனர்.

banner

Related Stories

Related Stories