தமிழ்நாடு

“சிறையில் வைத்து என்னை தீர்த்துக்கட்ட முயற்சிக்கின்றனர்” : முகிலன் பரபரப்பு புகார்!

உயரதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் சிறையில் அதிகாரிகள் என்னை கடுமையாகத் தாக்கினர் என முகிலன் கரூர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

“சிறையில் வைத்து என்னை தீர்த்துக்கட்ட முயற்சிக்கின்றனர்” : முகிலன் பரபரப்பு புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் மீது எடப்பாடி பழனிசாமி அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு எதிரான ஆதாரங்களை வெளியிட்டதை அடுத்து சூழலியலாளர் முகிலன் கடந்த பிப்.,15ம் தேதி அன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காணாமல் போனார்.

அதன் பிறகு கடந்த 6ம் தேதி திருப்பதி ரயில் நிலையத்தில் ஆந்திர போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்ட முகிலனை சிபிசிஐடி போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, முகிலன் மீது பாலியல் வழக்கின் பேரில் கரூர் போலீசார் கைது செய்த பின்னர் மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அதனையடுத்து, ஜூலை 24ம் தேதி வரை முகிலனை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதும், திருச்சி மத்திய சிறையில் முகிலனை போலீசார் அடைத்தனர்.

இந்நிலையில், பாலியல் வழக்கில் முகிலனை சிபிசிஐடி போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துவரப்பட்டார்.

அப்போது நீதிபதியிடம்,சிறையில் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், உயரதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் தன்னைத் தாக்கியதாகவும் முகிலன் முறையிட்டார்.

நீட், 8 வழிச்சாலை, ஸ்டெர்லைட், மாட்டிறைச்சி விவகாரம் ஆகியவை தொடர்பான 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் சிறையில் தான் உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் முகிலன் தெரிவித்தார். மேலும், சிறையில் வைத்து தன்னை தீர்த்துக்கட்ட முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் முகிலன் கூறினார்.

இவை அனைத்தையும் கேட்டறிந்த நீதிபதி விஜய் கார்த்திக், முகிலனின் வாய்மொழி வார்த்தையை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்கச் சொன்னதை அடுத்து முகிலன் அதனை எழுதி புகார் மனுவாக நீதிபதியிடம் அளித்தார். இதனையடுத்து போலீஸ் காவலில் எடுத்து முகிலனை விசாரிக்க நீதிபதி அனுமதி மறுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories