தமிழகத்தின் கோடை வெயில் நிறைவடைந்தும் கூட, வெயிலின் தாக்கம் குறையாமலே காணப்படுகிறது. அது மட்டுமில்லாமல் 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தண்ணீர் வறட்சி தற்போது தமிழகத்தில் நிலவுகிறது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், நிலத்தடி நீரும் கைகொடுக்காமல் போய்விட்டது. இதனால் மாநிலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. மக்கள், லாரிகளில் தண்ணீரை பிடித்து உபயோகித்து வருகின்றனர். ஒரு குடம் தண்ணீரை ரூ.10, 20 வீதம் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இருக்கையில், இந்த முறை கோடை வெயிலும் உச்சத்தை அடைந்துள்ளது. வட தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம், மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது புத்தகப் பையோடு, தண்ணீர் பாட்டிலையும் கொண்டுவரச் சொல்லி நிர்பந்தித்துள்ளது. இதேப்போல், அரசுப்பள்ளிகளில் குடி தண்ணீர் வசதியே இல்லையென்றும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
ஏற்கெனவே, மாணவ, மாணவிகள் புத்தகப்பையை சுமந்து செல்லவே சிரமப்பட்டு வரும் நிலையில், தற்போது தண்ணீர் பாட்டில்களையும் கொண்டுவரச் சொல்வது மிகுந்த வேதனையளிப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.