மு.க.ஸ்டாலின்

“அரசுப் பள்ளி மாணவர்களை விமானத்தில் ஏற்ற காரணமே ஏ.வி.எம்.சரவணன் தான்!” : முதலமைச்சர் நெகிழ்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் அவர்களின் படத்திறப்பு மற்றும் புகழ் வணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

“அரசுப் பள்ளி மாணவர்களை விமானத்தில் ஏற்ற காரணமே ஏ.வி.எம்.சரவணன் தான்!” : முதலமைச்சர் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்
இன்று (4.1.2026) சென்னை, விருகம்பாக்கத்தில் நடைபெற்ற, மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் அவர்களின் படத்திறப்பு மற்றும் புகழ் வணக்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆற்றிய உரை.

வரலாற்றில் தமிழ் திரைவுலகத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால், அதில் நிச்சயமாக ஏ.வி.எம். நிறுவனத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்கவே முடியாது. ‘மெய்யப்ப செட்டியார்’ என்று அன்போடு அழைக்கப்படக்கூடிய இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவரை எல்லோரும் அப்பச்சி, அப்பச்சி என்றுதான் செல்லமாக மரியாதையோடு, தைரியமாக அழைப்பதுண்டு.

அவருடைய மறைவிற்குப் பிறகு சரவணன் அவர்கள் இந்நிறுவனத்தை எப்படியெல்லாம் கட்டிக் காத்திருக்கிறார் என்பதைப் பற்றி அவரோடு நெருங்கிப் பழகியிருக்கக்கூடிய அண்ணன் எஸ்.பி. முத்துராமனாக இருந்தாலும் சரி,  நம்முடைய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சரி, கலைஞானியாக இருந்தாலும் சரி, நம்முடைய கவிஞர் வைரமுத்துவாக இருந்தாலும், அவர்கள் பேசுகின்றபோது பல்வேறு செய்திகளையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். 

நம்முடைய சரவணன் அவர்கள் பி.எஸ்.உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, அந்தப் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் கலந்துக்கொண்டு, முதல் பரிசு பெற்றிருக்கிறார். எதற்காக பரிசு பெற்றிருக்கிறார் என்றால்,  முதன்முதலில் கலந்துகொண்ட பேச்சுப் போட்டியில் பராசக்தி வசனத்தைப் பேசித்தான் வெற்றி பெற்று, பரிசையும் பெற்றிருக்கிறார். 

1967-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தபோது, அப்போது சென்னையில் அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அந்த உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றபோது திரு. ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

“அரசுப் பள்ளி மாணவர்களை விமானத்தில் ஏற்ற காரணமே ஏ.வி.எம்.சரவணன் தான்!” : முதலமைச்சர் நெகிழ்ச்சி!

அந்த விருந்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள், தலைவர் கலைஞர் அவர்கள், அமைச்சர் பெருமக்களெல்லாம் அந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அப்போது, ஏ.வி.எம். ஸ்டூடியோவில் காத்திருந்த கிருஷ்ணன் பஞ்சு அவர்கள் நம்முடைய சரவணன் அவர்களை தலைவர் கலைஞரிடத்தில் அப்போதுதான் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். அதற்குப் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன.

1972-இல் திரு. சரவணன் அவர்கள் ‘ஹலோ மெட்ராஸ்’ மாத இதழைத் தொடங்கியபோது, அதன் முதல் இதழை தலைவர் கலைஞர் அவர்கள்தான் வெளியிட்டார்கள். 1975-ஆம் ஆண்டு ஏ.வி.எம். ஸ்டூடியோவில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெற்றிருக்கிறது.

அந்த வேலைநிறுத்தம் நடைபெற்றபோது தலைவர் கலைஞர் அவர்கள்தான் அதில் முழுமையாக ஈடுபட்டு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமுகமான முடிவை ஏற்படுத்தித் தந்திருந்தார்கள். அதேபோல், ஏ.வி.எம். நிறுவனத்தின் பொன்விழா நடைபெற்றபோது, தலைவர் கலைஞர் அவர்கள் அந்த விழாவில் பங்கேற்று உரையாற்றியது மட்டுமல்ல, மேடையில் நின்று கொண்டே அங்கிருக்கக் கூடியவர்களுக்கு 190 கேடயங்களை தலைவர் கலைஞர் அவர்களே தன்னுடைய கரங்களால் வழங்கியிருக்கிறார்கள். 

ஏ.வி.எம். அவர்களுடைய நூற்றாண்டு விழா தொடக்கத்தில், ஃபிலிம் சேம்பரில் இன்றைக்கு நீங்கள் பார்க்கக்கூடிய திருவுருவச்சிலையை தலைவர் கலைஞர் அவர்கள்தான் திறந்து வைத்திருக்கிறார்கள். எதற்காக இதையெல்லாம் சொல்கின்றேனென்றால், கலைஞருடைய குடும்பத்திற்கும், கலைஞருக்கும், ஏ.வி.எம். குடும்பத்திற்கும் எந்தளவிற்கு நெருக்கம் இருந்திருக்கிறது, தொடர்பு இருந்திருக்கிறது என்பதற்கு இதெல்லாம் உதாரணங்களாக இருக்கிறது என்பதற்காகதான் இதையெல்லாம்  குறிப்பிடுகிறேன்.

நான் சென்னை மாநகரத்தின் மேயராக இருந்தபோது கடற்கரையில் நடைபயிற்சிக்குச் செல்வதுண்டு. அப்போது நம்முடைய சரவணன் அவர்களும் அவருடைய நண்பர்களோடு நடைபயிற்சிக்கு வருவார்கள். நான் அடிக்கடி அவரை சந்தித்துப் பேசுவதுண்டு. சென்னையெல்லாம் எப்படி இருக்கிறது, எப்படி அதை டெவலப் செய்ய வேண்டும் என்றெல்லாம் அறிவுரைகளை சொல்லியிருக்கிறார். 

“அரசுப் பள்ளி மாணவர்களை விமானத்தில் ஏற்ற காரணமே ஏ.வி.எம்.சரவணன் தான்!” : முதலமைச்சர் நெகிழ்ச்சி!

நான் மேயராக பொறுப்பேற்ற பிறகு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னையில் 10 பாலங்களை கட்டினேன் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். இந்தப் பாலங்கள் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு  நான் நேரடியாகச்  சென்று அழைப்பிதழ் கொடுத்ததில்லை, தபால் மூலம் அனுப்பி வைத்துவிடுவோம்.

ஆனால், அதை பார்த்துவிட்டு, நிகழ்ச்சி தொடங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே அந்த நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்து முன் வரிசையில் அமர்ந்திருப்பார். நான் ஆச்சரியப்படுவது உண்டு. நான் பல நேரங்களில் அவரை மேடைக்கு அழைப்பதுண்டு. ”இல்லை, இல்லை நான் அங்கேயே இருக்கிறேன். சென்னை மாநகர மக்களுக்கு இது முக்கியம். அதனால்தான் நான் இதை முக்கியம் என்று கருதி நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்” என்று என்னிடத்தில் அடிக்கடி தெரிவிப்பார்.

அதுமட்டுமல்ல. நான் மேயராகப் பொறுப்பேற்றிருந்தபோது மாநகராட்சியில் படித்துக்கொண்டிருக்கும் பள்ளி மாணவர்களையெல்லாம் விமானத்தில் திருப்பதி வரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏர் இந்தியா மூலம் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்குக் காரணமே நம்முடைய ஏ.வி.எம். சரவணன் அவர்கள்தான். அவரும் என்னுடன் வந்தார்கள்.

விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது நாங்கள் பேசிக்கொண்டிருந்த பல விஷயங்கள் இப்போதும் என்னுடைய நினைவில் பசுமையாக இருக்கிறது. முதலிலெல்லாம் கூத்து நிகழ்ச்சிகள் இருந்தன, அதன் பிறகு, நாடகம் வந்ததற்குப் பின் கூத்து மறந்து போய்விட்டது. சினிமா வந்த பிறகு நாடகம் காணாமல் போய்விட்டது. அதுபோல், ஒவ்வொன்றும் அந்தந்த நேரத்தில் வருகின்றபோது அதற்கு தகுந்தாற்போல் நாம் மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர இதையெல்லாம் பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சாதாரணமாக சொன்னார். நான் அதையெல்லாம் இப்போது நினைத்து பார்க்கிறேன்.

“அரசுப் பள்ளி மாணவர்களை விமானத்தில் ஏற்ற காரணமே ஏ.வி.எம்.சரவணன் தான்!” : முதலமைச்சர் நெகிழ்ச்சி!

காலத்திற்கேற்ற மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் காட்டினார். அந்த வகையில் எனக்கு அறிவுரைகள், ஆலோசனைகளையெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

2006-இல் அவருடைய அஞ்சல் தலையை தலைவர் கலைஞர் அவர்கள்தான் வெளியிட்டிருக்கிறார்கள். அதேபோல், 2023-ஆம் ஆண்டு இதே ஏ.வி.எம். ஸ்டூடியோவில் ஹெரிட்டேஜ் மியூசியத்தை வைத்திருக்கிறோம், நீங்கள் வரவேண்டும் என்று  என்னை அழைத்தார்கள், நான் உடனடியாக வந்தேன்.  நிகழ்ச்சிக்கு  நானும், கமல் அவர்களும்தான் வந்தோம். அப்போது, நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்ததையெல்லாம் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

அதுமட்டுமல்ல, 2006ஆம் ஆண்டு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள சிங்கப்பூரிலிருந்து ஓனிக்ஸ் என்ற கம்பெனியை வரவழைத்து அந்த பணிகளை செய்வதற்காக ஈடுபடுத்தியபோது, இதை திரையரங்கத்தில்  எப்படியாவது பிரச்சாரம் செய்ய வேண்டும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரே முன்னின்று அதில் யார் யார் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து நடிகை மனோரமா அவர்களையும்,  தாடி பாலாஜி அவர்களையும் அழைத்து  அந்தக் காணொலியை எடுத்து எல்லா திரையரங்கத்திலும் போட்டுக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். மட்கும் குப்பை, மட்காத குப்பை என்பதை விழிப்புணர்வோடு மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய அந்தப் பணியை நிறைவேற்றித் தந்ததற்காக நினைத்துப் பார்க்கிறேன்.

நீங்கள் திறந்து வைக்கப்பட்ட படத்தைப் பார்க்கலாம். கை கட்டி இருக்கின்ற அந்த காட்சி. எல்லோரும் கை கட்டுகிறோம். ஆனால், அவர் கை கட்டி நிற்பதுதான் இன்றைக்கும் அனைவரின் நினைவிலும் பரவலாக இருந்துகொண்டு வருகிறது.  அதை இன்றைக்கு நினைத்துப் பார்க்கிறோம். ஏதோ பயத்தின் காரணமாக அல்ல, அன்பின் காரணமாக, பாசத்தின் காரணமாகத்தான் அவர் அவ்வாறு கை கட்டி நிற்கின்றார். 

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அவர் நம்மையெல்லாம்  பாசத்தோடு கட்டிப்போட்டு வைத்ததால்தான் அவ்வாறு கை கட்டி நின்று நமக்குப் பாடமாகியிருக்கிறார். அவருடைய புகழ் வாழ்க! வாழ்க! வாழ்க! என்று சொல்லி நிறைவு செய்கிறேன். 

banner

Related Stories

Related Stories