தமிழ்நாடு

தமிழ் மின் நூலகத்தில் ஜி.டி.நாயுடுவின் சிறப்பு இணையப் பக்கம்... விவரம் உள்ளே!

தமிழ் மின் நூலகத்தில் ஜி.டி.நாயுடுவின் சிறப்பு இணையப் பக்கம் தொடக்கம் - தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தகவல்

தமிழ் மின் நூலகத்தில் ஜி.டி.நாயுடுவின் சிறப்பு இணையப் பக்கம்... விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி, ஜி.டி.நாயுடு அவர்களின் ஆவணங்கள் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கிவரும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, ”தமிழ்நாட்டு அறிவியலாளர் ஜி.டி. நாயுடு” என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு இணையப் பக்கத்தை (https://tamildigitallibrary.in/gdn), அன்னாரது நினைவு நாளான ஜனவரி 4 இன்று, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

பன்முக ஆளுமை ஜி.டி.நாயுடு, அரிய நூல்கள் அடங்கிய பெரிய நூலகம் ஒன்றைப் பராமரித்துவந்தார். அவருடைய தொகுப்பிலிருந்து 30 ஆயிரம் புத்தகங்களை அந்நாளைய கோவை நகரமன்றத்திற்கு அன்பளிப்பாக அளித்துள்ளார். பொதுவிழாக்களில் கலந்துகொண்டபோது, தம்முடைய உரையைச் சிறுநூலாக அச்சடித்து அவையினருக்குக் கொடுப்பது அவரது வழக்கம். அப்படியான அவரது எழுத்துகளையும் சிந்தனைகளையும் தாங்கிய கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள், அவர் பதிப்பித்த, அவர் வாசிப்புக்காகச் சேகரித்த நூல்கள், இதழ்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட அரும்பெரும் இணையப் பக்கம் இது. 

தமிழ் மின் நூலகத்தில் ஜி.டி.நாயுடுவின் சிறப்பு இணையப் பக்கம்... விவரம் உள்ளே!

“ஜி.டி.நாயுடுவின் அறிவைச் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும், எதிர்காலத்தில் நம்முடைய சந்ததியருக்கு, அவருடைய கண்டுபிடிப்பும் அறிவும் பெரும்கருவூலங்களாக அமையும்” என அறிஞர் அண்ணா கூறியதைத் தமிழ்நாடு அரசு அவருடைய சிந்தனைகளைக் கருவூலமாக்கி ஓர் அரிய காலப்பேழையை வெளியிட்டு நனவாக்கியுள்ளது.

”தமிழ்நாட்டு அறிவியலாளர் ஜி.டி. நாயுடு” சிறப்பு இணையப் பக்க உருவாக்கத்தில் பங்குவகித்த அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். 

அறிவைப் பொதுமை செய்வோம் என்னும் நோக்கத்தில் செயல்படும் தமிழ் மின் நூலகத்தின் இந்தச் சிறப்பு இணையப் பக்கம் தமிழ்கூறும் நல்லுலகுக்கு மேலும் ஒரு நல்வரவு. 

இந்நிகழ்வில் கோமகன், இயக்குநர் (பொ.), செல்வ புவியரசன், உதவி இயக்குநர், சித்தானை, திட்ட அலுவலர் உள்ளிட்ட தமிழ் இணையக் கல்விக்கழக அலுவலர்கள் பங்கேற்றனர். மேலும், ஜி.டி. நாயுடு அறக்கட்டளை தலைவர் கோபால், அறங்காவலர்கள் ராஜ்குமார், அகிலா, ஜி.டி. அருங்காட்சியகத்தின் பொது மேலாளர் சுரேஷ், நூலகர் சங்கீதா மற்றும் ரமேஷ்குமார், தலைவர், புகைப்பட ஆவணக்காப்பகம், புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனம், உள்ளிட்டோர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories