உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் வென்ற குஜராத் அணியில் இடம்பிடித்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். அதில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு இலங்கையின் கொழும்பு நகரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 ஏ அணிகள் பங்கேற்ற எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அங்கும் தனது திறமையை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் தொடர்ந்து உள்ளுர் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார்.இதனால் அவருக்கு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் வாய்ப்பு வழஙகப்பட்டது.அதிலும் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
பின்னர் சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அதிக ரன்கள் குவித்தவருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றி அசத்தினார். மேலும் இதனிடையே இங்கிலாந்து கவுண்டி அணியான சர்ரே அணிக்காகவும் சாய் சுதர்சன் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
இதனால் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் அவருக்கு ஆடும் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், ஆடும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போல கருண் நாயரும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். அறிமுக வீரருக்கான தொப்பியை சாய் சுதர்சனுக்கு புஜாரா வழங்கினார்.