விளையாட்டு

மெஸ்ஸியை வைத்து கிண்டல் செய்த ரசிகர்கள்.. விமர்சித்த பயிற்சியாளர்..ரொனால்டோவுக்கு நேர்ந்த சோகம் !

சூப்பர் கப் தொடரில் அல் நசார் அணியின் தோல்விக்கு ரொனால்டோவே காரணம் என அல் நசார் அணியின் பயிற்சியாளர் கூறியதாகவும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மெஸ்ஸியை வைத்து கிண்டல் செய்த ரசிகர்கள்.. விமர்சித்த பயிற்சியாளர்..ரொனால்டோவுக்கு நேர்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த நட்சத்திர வீரர் போர்த்துக்கல் அணி இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அந்த போட்டியில் ரொனால்டோ கண்ணீரோடு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ரொனால்டோவால் அல் நாசர் அணி பங்கேற்கும் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாது என்ற தகவல் வெளிவந்துள்ளது. அல் நாசர் அணியில் இணையும் முன்னர் ரொனால்டோ இங்கிலாந்தில் கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடினார்.

மெஸ்ஸியை வைத்து கிண்டல் செய்த ரசிகர்கள்.. விமர்சித்த பயிற்சியாளர்..ரொனால்டோவுக்கு நேர்ந்த சோகம் !

அப்போது எவர்ட்டன் அணிக்கு எதிரான போட்டியின் போது அவரோடு புகைப்படம் எடுக்கவந்த ஆட்டிசம் குறைபாடு கொண்டு சிறுவன் ஒருவரின் கைப்பேசியை ரொனால்டோ தட்டி விட்டதால் இங்கிலாந்து கால்பந்து சம்மேளனத்தால் இரண்டு போட்டிகளில் ரொனால்டோ விளையாடக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக அவர் தனது முதல் போட்டியிலேயே அவரின் நீண்ட நாள் போட்டியாளரான மெஸ்ஸியை எதிர்த்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. அர்ஜெண்டின கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி ’பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்’ என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணி சவூதி அரேபியாவுக்கு சென்று அங்கு சவுதி அரேபிய கிளப் ஆல் ஸ்டார் அணிக்கு எதிராக நட்பு போட்டி ஒன்றில் ஆடியது. 19-ம் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் PSG அணிக்காக மெஸ்ஸி முதல் கோல் அடித்த நிலையில், சவுதி அரேபிய கிளப் ஆல் ஸ்டார் அணிக்காக ரொனால்டோ பதில் கோல் அடித்து அசத்தினார். மேலும் ரொனால்டோ மற்றொரு கோலையும் அடித்து அதகளப்படுத்தினர்.

மெஸ்ஸியை வைத்து கிண்டல் செய்த ரசிகர்கள்.. விமர்சித்த பயிற்சியாளர்..ரொனால்டோவுக்கு நேர்ந்த சோகம் !

இறுதிவரை சுவாரசியமான நடைபெற்ற இந்த போட்டியில் PSG அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் சிறந்த வீரருக்கான விருதை ரொனால்டோ வென்று அசத்தினார். அதன்பின்னர் அல் நாசர் அணிக்காக சவூதி லீக்கின் முதல் போட்டியில் ரொனால்டோ களமிறங்கினார். அல் நாசர் - எட்டிஃபாக் அணிகள் மோதிய இந்த போட்டியில் 1-0 என்ற கணக்கில் அல் நாசர் அணி வெற்றி பெற்றாலும் அந்த போட்டியில் ரொனால்டோ கோல் எதையும் பதிவு செய்யவில்லை.

அதன்பின்னர் நேற்று முன்தினம் நடைபெற்ற சவூதி சூப்பர் கப் தொடரின் அரையிறுதி போட்டியில் ரொனால்டோவின் அல் நாசர் அணி அல் இத்திஹாத் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே அசத்திய அல் இத்திஹாத் அணி அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. இறுதியில் அல் இத்திஹாத் அணி ரொனால்டோவின் அல் நாசர் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.

இந்த போட்டியில் சில வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அதனை கோலாக்க ரொனால்டோ தவறினார். அல் நாசர் அணிக்காக தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ரொனால்டோ கோல் அடிக்க தவறிய நிலையில், அவர் சவூதி அரேபியாவில் தடுமாறிவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும், இந்த போட்டி முடிந்த பின்னர் மைதானத்தில் இருந்தே ரொனால்டோ வெளியேறியபோது அங்கிருந்த ரசிகர்கள் மெஸ்ஸி மெஸ்ஸி என ரொனால்டோவை கிண்டல் செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து சூப்பர் கப் தொடரில் அல் நசார் அணியின் தோல்விக்கு ரொனால்டோவே காரணம் என அல் நசார் அணியின் பயிற்சியாளர் கூறியதாகவும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ரொனால்டோ ஆடிய மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளர் மற்றும் போர்த்துக்கல் அணியின் பயிற்சியாளர் ஆகியோர் ரொனால்டோ குறித்து விமர்சனம் செய்த நிலையில், தற்போது அல் நசார் அணியின் பயிற்சியாளரும் அந்த வரிசையில் இறங்கியுள்ளது ரொனால்டோ ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories