விளையாட்டு

கோலி vs கங்குலி பஞ்சாயத்து கோலி vs BCCI ஆக மாறியது எப்படி? சேத்தன் ஷர்மா பேச்சால் புது சர்ச்சை!

கோலி vs கங்குலி பஞ்சாயத்து இப்போது முழுமையாக கோலி vs BCCI பிரச்னையாக மாறியிருக்கிறது.

கோலி vs கங்குலி பஞ்சாயத்து கோலி vs BCCI ஆக மாறியது எப்படி? சேத்தன் ஷர்மா பேச்சால் புது சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

“கோலியை கேப்டன் பதவியிலிருந்து விலகவேண்டாம் என்று நாங்கள் எல்லோருமே கூறினோம்” என்று சொல்லியிருக்கிறார் இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. அந்தத் தொடருக்கு முன்பு திடீரென டி-20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த உலகக் கோப்பையே இந்திய டி-20 அணிக்கு தான் தலைமை வகிக்கும் கடைசித் தொடர் என்று கூறினார். ஒருநாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தக் காத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

அவர் தலைமையிலான அணி தொடர்ந்து ஐ.சி.சி தொடர்களை வெற்றி பெறத் தவறியதால் அவர் மீது தொடர்ந்து விமர்சனம் எழுந்துகொண்டே இருந்தது. அதனால், இந்த முடிவை எடுத்திருப்பார் என்று கருதப்பட்டது. அந்த முடிவை அறிவித்த சில நாள்களிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐ.பி.எல் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் அந்த சீசனோடு விலகுவதாகக் கூறினார்.

கோலி பதவி விலகியதும் இந்திய டி-20 அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டார். இதனையடுத்து இந்திய ஒருநாள் அணிக்கும் ரோஹித்தை கேப்டனாக அறிவிக்கவேண்டும் என்ற வாதம் எழுந்தது. இருந்தாலும், ஒருநாள் அணிக்கு கேப்டனாகத் தொடர கோலி விருப்பம் தெரிவித்திருந்ததால் எந்த மாற்றமும் நிகழாது என்று கருதப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை அறிவிக்கும்போது, ரோஹித்தை டி-20 மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டனாக அதிகாரபூர்வமாக அறிவித்தது பி.சி.சி.ஐ.

அந்த அறிவிப்பு பெரிய சர்ச்சையை ஏற்படுத்த, “கோலியை டி-20 கேப்டன் பதவியிலிருந்து விலகவேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால், அவர் அதைக் கேட்கவில்லை. வைட் பால் கிரிக்கெட்டின் இரண்டு ஃபார்மட்டுக்கு இரண்டு கேப்டன்கள் இருப்பது சரியான முடிவில்லை என்று கருதியதால், செலக்டர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்” என்று அதுபற்றிக் கூறினார் பி.சி.சி.ஐ தலைவர் சௌரவ் கங்குலி.

ஆனால், அதை மறுத்து மிகப்பெரிய சர்ச்சையைத் தொடங்கிவைத்தார் விராட். தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்குச் செல்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் பதவி விலகுகிறேன் என்று சொன்னபோது யாரும் அதற்கு மறுப்புச் சொல்லவில்லை. எல்லோரும் ஏற்றுக்கொள்ளவே செய்தனர்” என்று குண்டைத் தூக்கிப் போட்டார். அதுமட்டுமல்லாமல், அறிவிப்புக்கு ஒன்றரை மணி நேரம் முன்புதான் அவர்கள் முடிவு தனக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் கூறினார். அதனால், கங்குலி மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அதைப் பற்றி மீடியாவில் பேசுவதையும் தவிர்த்தார் கங்குலி.

இந்நிலையில், நேற்று தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அப்போது பேசிய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா, “கோலியை பதவி விலகவேண்டாம் என்று எல்லோரும் கூறினோம். அதுவும் உலகக் கோப்பைக்கு முன்பு அந்த முடிவை எடுப்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொன்னோம். ஆனால், அவர் முடிவில் தீர்க்கமாக இருந்தார். அந்த முடிவில் அவர் பல நாள்களாக இருந்ததுபோல் தெரியும்போது, அதை மதிப்பதும் முக்கியம்” என்று கூறினார்.

சேத்தன் ஷர்மா கூறியிருப்பது கோலி சொன்னதற்கு நேரெதிராக இருப்பது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories