அரியலூர் மாவட்டம் செந்துரையிலிருந்து ஆர்.எஸ் மாத்தூர், விழுப்புரம் வழியாக சென்னைக்கு செல்லும் குளிர்சாதன பேருந்து சேவையினை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து, அந்த பேருந்தில் பொதுமக்களுடன் அமைச்சர் சிவசங்கர் பயணித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்தாண்டு அரசு தீபாவளிக்கு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்திருந்தார்கள். ஆனால் நேற்று வரை 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளார்கள். போக்குவரத்து வரலாற்றில் இல்லாத வகையில் சாதனையாக நேற்று மட்டும் 83 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்திள்ளார்கள். சென்னையில் இருந்து மட்டும் 53 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளார்கள். இதெல்லாம் போக்குவரத்து துறையில் இல்லாத ஒரு சாதனையாகும்.
வடகிழக்கு பருவமழையை சமாளிப்பதற்கு மின்சாரத்துறை தயாராக உள்ளது. காற்று பலமாக வீசி, மின்கம்பங்கள் சாய்ந்தால் அவற்றிற்கு பதிலாக மாற்று கம்பங்களை இருப்பில் வைக்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தி உள்ளோம். பணியாளர்களும் அனைத்து நேரங்களிலும் கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளோம். எந்த பிரச்சனை வந்தாலும் அதனை சமாளிப்பதற்கு மின்சாரத் துறை தயாராக உள்ளது.
எடப்பாடி பழனிசாமியிடம் திராவிடம் என்றால் என்ன என்று கேட்டதற்கு, அதற்கெல்லாம் அதிக புத்தகங்கள் படித்திருக்க வேண்டும் அதைப்பற்றி எனக்கு தெரியாது என கூறினார். திராவிடம் என்றால் என்ன என்று தெரியாது என கூறிய பழனிசாமி தற்போது திராவிட கட்சிக்கு அதிமுகதான் உதாரணம் என்று சொன்னது நகைப்புக்குரியது. அவரைப் பொருத்தவரை கொள்கை எதுவும் அவருக்கு கிடையாது.
எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கம்பெனி போல நினைக்கிறார் .அந்த கம்பெனியை அவர் லீஸ்க்கு எடுத்து நடத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். எனவே திராவிடத்திற்கும் அவருக்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை. அவர் அதிமுக பெயரை அமித்ஷா திமுக என மாற்றக்கூடிய சூழ்நிலைக்கு சென்று கொண்டிருக்கிறார்" என்று விமர்சித்தார்.