ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த புதியக் கல்வி கொள்கையை ஏற்காததால், புதியக் கல்வி கொள்கைக்கு சம்மந்தம் இல்லாத சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதியான ரூ.2,291 கோடியை ஒன்றிய அரசு விடுவிக்க மறுத்துள்ளது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து தொடர்பாக மனுவில், "தமிழ்நாடு அரசின் கல்வி திட்டம் ஏற்கனவே சிறப்பான முறையில் உள்ளது. இரு மொழி கொள்கையை தமிழ்நாடு பின்பற்றி வருகிறது. தமிழ் தாய்மொழி அல்லாத மாணவர்களுக்கு மற்ற மொழிகளில் படிக்க போதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2010 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் மூலம் மாநிலம் முழுவதும் சமமான பாடத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டின் கல்வித்தரம் சிறப்பாக உயர்ந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு சட்டப்படி ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய கல்வி திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த தேவை இல்லை.
ஒன்றிய அரசு தனது கல்வி கொள்கையை திணிக்க நிதி விவகாரத்தை பயன்படுத்த கூடாது. இது போன்ற கல்வி திணிப்பு என்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது. அரசியல் சாசனம் வழங்கி உள்ள உரிமையின் படி மாநில அரசு சொந்த கல்வி திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு தடையாக இருப்பது அரசியல் அமைப்புக்கு எதிரானது.
ஒன்றிய அரசு கல்வி நிதி வழங்காததால் 43.94 லட்சம் மாணவர்கள், 2.21 லட்சம் ஆசிரியர்கள், 32,701 இதர பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பிப்ரவரி மாதம் முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதற்கு ஒன்றிய அரசு அளித்த பதில் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஒன்றிய அரசு வழங்க வேண்டிய 2151.59 கோடி கல்வி நிதியும், அதற்கான ஆறு சதவீத வட்டி 139.70 கோடியும் சேர்த்து 2291 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.