தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு, ஆளுநர்களை வைத்து முட்டுக்கட்டையிடுவதும்; பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு உரிய நிதி வழங்காமல் வஞ்சிப்பதும் ஒன்றிய பா.ஜ.க அரசின் தொடர் நடவடிக்கையாக அமைந்துள்ளது.
இதனால், இந்தியாவை ஒற்றை நாடாக, ஒற்றுமையாக காக்க முழுமையான பங்களிக்கும் மாநிலங்கள் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட இன்றியமையாத துறைகள் சார்ந்து கடுமையாக வஞ்சிக்கப்படுகின்றன.
இத்தொடர் வஞ்சிப்பை போக்கும் பொருட்டு, மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும் உயர்மட்ட அளவிலான குழுவினை அமைத்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, “இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது.
இதன் உறுப்பினர்களாக, இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தர் அசோக் வர்தன் மற்றும் தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் மேனாள் துணைத்தலைவர், பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் இடம்பெறுவார்கள்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கு, இந்திய அளவில் ஆதரவுகள் பெருகி வரும் நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வருமான அகிலேஷ் அவர்களும் தனது ஆதரவைப் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து, அகிலேஷ் அளித்த பேட்டியில் “மாநில அரசின் உரிமைகளை ஒவ்வொன்றாய் ஒன்றிய அரசு பறித்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநில உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மாநில சுயாட்சியைக் காக்க அவர் நியமித்திருக்கும் உயர்நிலைக் குழுவை சமாஜ்வாதி கட்சி ஆதரிக்கிறது.
இந்திய அரசியலமைப்பு, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை வலுமையாக எடுத்துரைக்கிறது. இதுபோன்ற கட்டமைப்பு கொண்ட ஒரு நாட்டில், எந்த ஒரு மாநிலமும் வஞ்சிக்கப்படக்கூடாது” என தெரிவித்துள்ளார்.