ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இருந்து வெளியானதை தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் வில்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் கொடுக்க வேண்டும். சட்டசபையில் ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பி வைக்கும்போது, அதை ஆளுநர்கள் காலம் தாழ்த்தக்கூடாது. உடனடியாக ஒரு மாதத்திற்குள்ளாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
10 மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்டு பல்வேறு காலகட்டங்களில் அந்த மசோதாக்கள் மீது ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி வழக்கு தொடரப்பட்டது.
வேந்தர் பதவியில் ஆளுநர் நீடிக்க கூடாது, மாநில அரசு நியமிப்பவரே வேந்தராக இருக்க வேண்டும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டு அதற்கு அனுமதி வழங்காததால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்து, அந்த பத்து மசோதாக்களும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மசோதாக்கள் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் சுயாட்சியை முதலமைச்சர் இந்த வழக்கின் மூலமாக நிலைநாட்டி உள்ளார். இனி வரும் காலங்களில் ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலம் தாழ்த்த முடியாது. ஒரு ஆளுநர் நண்பராக, வழிகாட்டியாக, ஆலோசகராக இருக்க வேண்டும். தடைகளை ஏற்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து ஆளுநர்களுக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும்
இந்த தீர்ப்பின் மூலமாக இன்றிலிருந்து ஆளுநர் வேந்தர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மாநில அரசு நியமிப்பவரே வேந்தராக இருப்பார். இந்த வழக்கின் தீர்பு மூலமாக குடியரசு தலைவர் நிறுத்தி வைத்துள்ள நீட் மசோதா தொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கு தொடர வழி வகை ஏற்பட்டுள்ளது .வழக்கு தொடர்வது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார்" என்று கூறினார்,