
நாகை மாவட்டத்திற்கு அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். அதன் தொடக்கமாக, நாகை மாவட்ட கழக செயலாளர் இல்லத் திருமண விழாவை தலைமையேற்று நடத்தினார்.
அப்போது இல்லத் திருமண விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மும்மொழிக் கொள்கையையும், தொகுதி மறுசீரமைப்பையும் கட்டாயப்படுத்தி கொண்டுவந்து தமிழ்நாட்டின் உரிமை மற்றும் பிரதிநிதித்துவத்தை சிதைக்க திட்டமிடுகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. அதனை எதிர்க்கவே அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்திருக்கிற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வரமுடியாது, வர இயலாது என்பவர்களுக்கு நான் சொல்ல வேண்டியது, “இது தனிப்பட்ட கட்சி சார்ந்த சிக்கல் அல்ல. இதனை அரசியலாக பார்க்காமல், தமிழ்நாட்டின் உரிமைக்காக என்பதை உணர்ந்து முடிவெடுங்கள்” என்பதே.
நாடாளுமன்றத்தில் இப்போது தமிழ்நாடு பெற்றிருக்கிற 39 மக்களவை உறுப்பினர்களை வைத்துக்கொண்டே, ஒவ்வொன்றையும் போராடிதான் பெறவேண்டியதாக உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைப்பு என்கிற பெயரில் மேலும் குறைப்பது என்பது முற்றிலும் தமிழ்நாட்டு உரிமைக்கு எதிரானது.
ஆகவே, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தால்தான் நாம் உரிமையை மீட்க முடியும் என்ற ஒருமித்த நோக்கத்துடன் அனைவரும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கௌரவம் பார்க்காமல் பங்கேற்க வேண்டும்” என்றார்.








