பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா வழிபாட்டு நிகழ்வில் நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பங்குகொண்டு வருகின்றனர்.
இது போன்ற மக்கள் திரள் முன்பே எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த நிலையிலும், உத்தரப் பிரதேச பா.ஜ.க அரசின் நிர்வாக தோல்வியால் கூட்டநெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகளும், மக்கள் காணாமல் போகும் போக்கும் கும்பமேளாவில் அரங்கேறியது.
இதனையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனக்குறைவாக செயல்பட்ட பா.ஜ.க.விற்கு தேசிய அளவிலான அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, “உத்தரப் பிரதேசத்தின் மகாகும்பமேளா கூட்டநெரிசல் சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கிற போதும் கூட, தவறிழைக்கப்பட்டதை ஒப்புகொள்ள மனமில்லாமல் இருக்கிறது பா.ஜ.க. அரசு.
ஒருவேளை, பா.ஜ.க சொல்வது போல தவறிழைக்கப்படவில்லை என்றால், ஏன் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கையை வெளியிடாமல் பா.ஜ.க அரசு அமைதி காத்து வருகிறது.
இரட்டை இன்ஜின் (மாநில - ஒன்றிய) ஆட்சியில் உண்மைகள் மறைக்கப்படுவது வழக்கமாகியுள்ளது. உயிரிழப்புக்கும், பாதுகாக்க தவறியதற்கும் காரணமானவர்கள் உறுதியாக தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.