
சென்னை ECR-ல் கடந்த 24-ம் தேதி இரவு நேரத்தில் காரில் சென்ற சில பெண்களை, மற்றொரு காரில் வந்த சில இளைஞர்கள் துரத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர் அதிமுக குடும்ப பின்னணியை சேர்ந்தவர் என்பது அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் திமுக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக ஆட்சியின் நலத்திட்டங்களால் மகளிர் முன்னேறுவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் திமுக அரசின் மீது பழி போட முயற்சிப்பதும் சில நாட்களிலேயே உண்மை தெரிய வந்து அந்த முயற்சி தோல்வியடைவதும் வாடிக்கையாகிவிட்டது.

அந்த வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு என்ற முக்கிய குற்றவாளி அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என தனது பின்புலத்தை அவரே ஒப்புக் கொள்ளும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது.திமுக கொடியைக் காட்டி திமுக மீது பொய்யான வீண் பழி சுமத்தி அதன் மூலம் சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது.
பெண்கள் மீதான பாலியல் தாக்குதல், போக்ஸோ குற்றங்கள் என அதிமுகவை சேர்ந்தவர்களும் அவர்களது குடும்பத்தினரும்தான் பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது ஒவ்வொரு குற்றச் செயலின் பின்புலத்தையும் ஆராய்ந்தால் தெரிய வருகிறது. திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்? வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா? "என்று கூறப்பட்டுள்ளது.








