மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்திற்கு இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மோதல்போக்கு இருந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டும், அப்பாவி குழந்தைகள் நடுத்தெருவிற்கு வந்தும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடின்றி முகாம்களில் வாழ்க்கை நடத்தும் நிலை இன்று வரை தொடர்கிறது.
மாநிலத்தை இயல்புநிலைக்கு கொண்டுவராமல் பா.ஜ.க அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.
இந்நிலையில், அம்மாநில பா.ஜ.க முதலமைச்சர் பைரேன் சிங் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். புத்தாண்டு அன்று செய்தியாளர்களை சந்தித்த, "2023 முதல் தற்போது வரை நடந்த சம்பவங்களுக்காக மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். வன்முறை சம்பவங்களால், பலர் தங்களது அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர். இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். மன்னிப்பு கோருகிறேன்." என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மணிப்பூர் பிரச்சினைக்கு மன்னிப்பு கேட்டால் போதுமா? என காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து கூறியுள்ள அசோக் கெலாட், ”பிரதமர் மோடியும் அமித் ஷாவும் பெரும் குற்றம் செய்திருக்கின்றனர். இந்தியாவுக்கு மணிப்பூருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல அவர்கள் நடந்தனர். மணிப்பூரை ஆளும் பாஜக முதல்வரோ, 18 மாதங்களாக அங்கு நடந்து வரும் வன்முறைக்கு இப்போது மன்னிப்பு கேட்டிருக்கிறார். சூழலை கையாள முடியவில்லை எனில் அவர் பதவியை ராஜிநாமா செய்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.