
சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் புத்தாண்டையொட்டி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஆண்டுதோறும் ஜனவரி முதல் நாளில் ஊடக சந்திப்பதை கடந்த 28 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் தை பொங்கல் வாழ்த்துக்கள்.
அனைத்து தரப்பு மக்களுக்காக புதிய புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருகிறார். மற்ற மாநில முதல்வர்களுக்கு எடுத்துகாட்டாக நம்முடைய முதலமைச்சர் இருக்கிறார். ஒன்றிய அரசு செய்ய வேண்டிய உதவியை இதுவரை செய்யவில்லை. நாம் கேட்டதில் 5 சதவீதம் நிதியைதான் ஒன்றிய அரசு தந்து உள்ளது. ஒன்றிய அரசு மாநில அரசுகளை கொஞ்சம் கொஞ்சமாக நசுக்குகிறது. இதனால் எதிர்காலம் விபரீதமாக மாறி விடும் என்ற அச்சம் உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மோசமான திட்டத்தை மோடி செயல்படுத்த நினைக்கிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையில் சாத்தியமற்றது. பல தேசியங்களை கொண்ட உபகண்டம்தான் இந்தியா. திமுகவின் முயற்சியால்தான் விவசாயிகள், நெசவாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக கூட்டணி என்று பெயர்தான் உள்ளது. ஆனால் மோடி கூட்டணி கூட்டத்தை இதுவரை கூட்டவே இல்லை. ஆனால் வாஜ்பாய் மாதம் ஒரு முறை கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை கூட்டுவார். இந்தியாவுக்கு பேராபத்து உள்ளது என்றால் அது இந்த மோடி அரசால் தான் உள்ளது. இந்தியாவின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் கேள்விக்குறியாகி உள்ளது.
குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்து இந்து ராஷ்டிரியத்தை உருவாக்கி அதில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் வைத்து விடுவார்கள். இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்ற தான் ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வர பார்க்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 40 இடங்களில் திமுக தான் வெற்றி பெற்றது. அடுத்து முறையும் இதே நிலைமை தான் வரும், 400 இடங்களில் வருவோம் என்று சுற்றி சுற்றி வந்த மோடிக்கு 250 தான் கிடைத்தது. எதிர்காலத்தில் இந்த 250 கூட மோடிக்கு வராது. வரபோகும் தேர்தலில் 200க்கு மேல் இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றிபெறும். தமிழ்நாட்டில் 2026 ஆம் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் அதிமான இடங்களில் வெற்றி பெறுவோம்"என்று கூறினார்.








