மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.
இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தின் பெருவாரியான பங்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கும், மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அபாயம் விளைவித்ததற்கும் ஆணி வேராய் அமைந்த ஸ்டெர்லைட் - வேதாந்தா நிறுவனமே உரிமை கொண்டுள்ளது.
இதுபோன்ற ஒரு பின்னணி கொண்ட ஒரு நிறுவனத்தை கொண்டு மேலும் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் வஞ்சிப்பதற்கான நடவடிக்கையை ஒன்றிய பா.ஜ.க எடுத்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசிற்கு அனுப்பப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் ஒன்றிய அமைச்சகத்திற்கு கடிதமும் எழுதினார். நாடாளுமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான அனுமதியை தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக கண்டித்தனர்.
இந்நிலையில், மதுரை மேலூர் டங்ஸ்டன் சுரங்க ஏல ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஒன்றிய சுரங்க அமைச்சகம். “இந்த அறிவிப்பு, தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெரும் வெற்றியாக அமைந்துள்ளது” என அரசியல் தலைவர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.