நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் நாளில் அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது தினக்கொண்டாட்டம் அனுசரிக்கப்பட்டபோது, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
அப்போது குடியரசுத்தலைவரின் உரையில், "சோசலிஸ்ட்" மற்றும் "மதச்சார்பற்ற" என்ற சொற்கள் உட்பட அரசியலமைப்பின் சில முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்படவில்லை. இந்த விவகாரம் பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியது. ஏற்கனவே இந்த கூட்டத்தொடரில் மக்களுக்கு விரோதமான வக்ப் வாரியம் திருத்தச்சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்டவைக்கான சட்டமசோதாவை நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு துடிக்கிறது.
அதோடு அதானி முறைகேடு குறித்தும் விவாதம் நடத்த பாஜக அரசு மறுத்து வருகிறது. மேலும் வழக்கம்போல் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி-க்கள் பேசிக்கொண்டிருக்கும்போது மைக் அணைக்கப்படுகிறது. சபாநாயகர் ஓம் பிர்லாவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையிலும், தனது புத்தியை ஒன்றிய பாஜக அரசு வெளிப்படுத்தி வருகிறது.
இந்த சூழலில் தேசிய எலக்ட்ரிக் பஸ் திட்டம் (NEBP) தொடர்பாக திமுக எம்.பி. ஆர்.கிரிராஜன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார்.
=> 50,000 மின்சார வாகனங்களைப் பயன்படுத்த கன்வெர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் (CESL) அமைப்பை ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதா, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மின்சாரப் பேருந்துகளின் விவரங்கள் குறித்த கிரிராஜனின் கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் நிதின் கட்காரி, 13.05.2022ல் நிதி ஆயோக் கடிதத்தின் படி அந்த பணியை முடிக்க CESLக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கான பதிலில், மின்சார வாகனங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக PM-eBus சேவா மற்றும் PM e-Drive போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், மாநில போக்குவரத்து கழகங்கள் இந்த உதவிக்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அல்லது கனரக தொழில்கள் அமைச்சகத்திற்கு முன்மொழிவுகளை அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.
=> "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ஒன்றிய அரசு நிதி உதவி ஏதும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதா?" என்ற கேள்விக்கு,
TNSTC-க்கு கடந்த 5 ஆண்டுகளில் நிதியுதவியாக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை எனவும் நிதின் கட்காரி பதிலளித்துள்ளார். நாடு முழுவதும் அரசு, தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களால் 10677 மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் ஒன்றிய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.