
ALT NEWS-ன் இணை நிறுவனரான சுபேர், சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகளை ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் பணியை செய்து வருபவர். உண்மையை உரைப்பதாலேயே, பாஜகவின் பகையை சம்பாதித்தவர்.
ராமர் கோவில் திறப்பை ஒட்டி கூட ஒரு செய்தி பரப்பப்பட்டது. துபாயின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் ராமர் படம் திரையிடப்பட்டது எனவொரு செய்தி! அச்செய்தியில் உண்மையில்லை என்பதை கண்டறிந்த சுபேர், அதற்கான சான்றுகளையும் பதிவிட்டார்.
அதேபோல், கடந்த ஆண்டு மார்ச் மாதம், தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற செய்தி இணையத்தில் வேகமாக பரவியது. அச்செய்தியையும் பொய்யென கண்டுரைத்தார் சுபேர். அச்செய்தியில் இருந்த புகைப்படமும் காணொளியும் தமிழ்நாட்டை சேர்ந்தவை அல்ல என்பதை சான்றுகளுடன் நிறுவினார்.
இப்படி பா.ஜ.கவின் பொய் முகத்திரையை சமூக ஊடகங்களில் ஆதாரத்துடன் கிழித்து வருகிறார் முகமது சுபேர். இந்த நிலையில்தான் உத்தரப்பிரதேச சாமியார் நர்சிங்கானந்த் என்பவர் முகமது நபிகள் பற்றி கொச்சையாக பேசிய வீடியோவை பகிர்ந்து ’வெறுப்புப் பேச்சு’ என சமூக ஊடகத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து, முகமது சுபேர் மீது, பாரதிய நியாய சன்ஹிதாவின் 152 பிரிவான ’இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள்’ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது உ.பி காவல்துறை.
உ.பி காவல்துறையின் இந்த அராஜக நடவடிக்கைக்கு ஊடகவியலாளர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் ”சுபேரை நான் ஆதரிக்கிறேன். #IStandWithZubair பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியவற்றுக்கு நீங்களும் ஆதரவு கொடுக்க வேண்டுகிறேன்" என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.








