நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் நாளான நேற்று, அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது தினக்கொண்டாட்டம் அனுசரிக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
அப்போது குடியரசுத்தலைவரின் உரையில், "சோசலிஸ்ட்" மற்றும் "மதச்சார்பற்ற" என்ற சொற்கள் உட்பட அரசியலமைப்பின் சில முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்படவில்லை. இந்த விவகாரம் பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியது. ஏற்கனவே இந்த கூட்டத்தொடரில் மக்களுக்கு விரோதமான வக்ப் வாரியம் திருத்தச்சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்டவைக்கான சட்டமசோதாவை நிறைவேற்ற ஒன்றிய பா.ஜ.க அரசு துடிக்கிறது.
அதோடு அதானி முறைகேடு குறித்தும் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கையை ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு நாட்களாகவே நாள் முழுவதும் அவையை ஒன்றிய அரசு விவாதம் நடத்தாமல் ஒத்திவைத்தது. இன்றும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றம் இயங்குவதை பாஜக விரும்பவில்லை என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ”எதிர்க்கட்சியின் வேலை என்ன? நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை முன் வைப்பதுதான் எதிர்க்கட்சியின் வேலை. அதற்குதான் நாடாளுமன்றம் இருக்கிறது.
மணிப்பூர், சம்பல், அதானி ஊழல், விலைவாசி உயர்வு என எதிர்க்கட்சியான நாங்கள் எதை பேசக் கேட்டாலும் அவர்கள் அனுமதி மறுக்கிறார்கள். நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை இருட்டடிப்பு செய்கிறார்கள். நாடாளுமன்ற அவைகள் இயங்க பா.ஜ.க அரசாங்கம் விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.