அரசியல்

"அறிவியலுக்கு மாற்றாக புராணங்களைத் திணிப்பதை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்" - கனிமொழி MP !

அறிவியலுக்கு மாற்றாக புராணங்களைத் திணிப்பதை எதிர்க்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

"அறிவியலுக்கு மாற்றாக புராணங்களைத் திணிப்பதை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்" - கனிமொழி MP !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு விஷயங்களில் மூடநம்பிக்கைகளை புகுத்தி வருகிறது. அந்த வகையில் அறிவியல் துறையிலும் புராணங்களையும், மத விஷயங்களையும் புகுத்தி வருகிறது. இதன் காரணமாக அடுத்த தலைமுறையே நேரிடையாக பாதிக்கப்படுகிறது.

பள்ளி, கல்வி பாடத்திட்டங்களில் அறிவியலுக்கு பதில், புராண கதைகளை திணித்து வருகிறது. மேலும், அறிவியல் மாநாடுகளில் புராண கதைகளில் அறிவியல் இருக்கிறது என்று கூறி உலகளவில் இந்தியாவின் பெயரை பாஜக அரசு அவமானப்படுத்தி வருகிறது.

அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பதில், புராண கதைகள் குறித்த நம்பிக்கைக்கும், ராமாயண தேடலுக்கும் பாஜக அரசி நிதி ஒதுக்கி வருகிறது. இதனை பல்வேறு தரப்பினர் விமர்சித்தாலும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதே வேலையே செய்து வருகிறது.

இந்த நிலையில், அறிவியலுக்கு மாற்றாக புராணங்களைத் திணிப்பதை எதிர்க்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். திருவனந்தபுரம் அருகே உள்ள தோன்னக்கல் அறிவியல் பூங்காவில் சர்வதேச அறிவியல் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடைபெற்ற கருத்தரங்கில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டார்.

"அறிவியலுக்கு மாற்றாக புராணங்களைத் திணிப்பதை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்" - கனிமொழி MP !

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த கவிஞர்கள் கடவுள்களைக் கூட கேள்வி கேட்ட பாரம்பரியம் நமக்கு உள்ளது. மனிதனின் எலும்பிலும், தோலிலும் சாதி எழுதப்பட்டுள்ளதா என்று கவிதைகளின் மூலம் கேள்வி கேட்ட கவிஞர்கள் நம்முடன் இருந்தனர்.ஆனால் தற்போது சாதி, மதம் போன்ற வார்த்தைகளுக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தங்களுக்குப் பிடித்த உணவு சாப்பிடுபவர்களையும், பிடித்த உடைகளை அணிபவர்களையும் சமூகத்தை விட்டு ஒதுக்கி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தான் அறிவியலுக்கும், அறிவியல் விழிப்புணர்வுக்கும் முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டிய காலகட்டமாகும். அறிவியல் என்பது இயற்கை நம்முடன் பேசும் மொழியாகும். மக்களிடையே அறிவியல் உணர்வை பரப்ப வேண்டும் என்று நமது அரசியல் சாசனம் கூறுகிறது. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களே அறிவியலை கட்டுக்கதையாகவும், புராணங்களை அறிவியலாகவும் திரித்து விடுகின்றனர்.

பகுத்தறிவற்ற வாதங்களுக்கு பதிலளிக்க வேண்டியது அரசியல் சாசனத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும். அரசியல் சாசனம் வகுத்துள்ள அறிவியல் உணர்விலிருந்து சமூகம் தனித்து நிற்கும் நிலை தற்போது உள்ளது. அறிவியலுக்கு மாற்றாக புராணங்களை முன் வைப்பதை எதிர்க்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். இந்த சூழ்நிலையில் அறிவியலை கொண்டாடுவது வரவேற்கத்தக்கதாகும். அறிவியலையும், கலையையும், இலக்கியத்தையும் கொண்டாடும் கேரள அரசை நான் பாராட்டுகிறேன்"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories