அரசியல்

"தமிழைப் பலிகடாவாக்க காசி தமிழ்ச் சங்கமம்; உங்கள் சூழ்ச்சியை தமிழ்நாடு சுக்குநூறாக்கும்": சிலந்தி தாக்கு

தமிழைப் பலிகடாவாக்க திட்டமிட்டு நடத்தப்படும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி என முரசொலியில் சிலந்தி கட்டுரை எழுதியுள்ளார்.

"தமிழைப் பலிகடாவாக்க காசி தமிழ்ச் சங்கமம்; உங்கள் சூழ்ச்சியை தமிழ்நாடு  சுக்குநூறாக்கும்": சிலந்தி தாக்கு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிலந்தி பதில்கள்!

கேள்வி :– காசியில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமம் துவக்க விழா நிகழ்ச்சி எப்படி?

பதில்:– அச்சா… பகுத் அச்சா.. ஹை…! தமிழ்ச் சங்கமத் துவக்க விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துகூட இல்லையே! இந்தி சமஸ்கிருதமிடையே தமிழ் நசுக்கப்பட்டு, மூச்சுத்திணறிக் கிடந்த காட்சியைத்தானே அங்கு காண முடிந்தது.

கேள்வி : தமிழ் மடாதிபதிகளுக்கு தனிமேடை தந்து கவுரவப்படுத்தியது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

பதில்: அதிலேகூட தமிழாய்ந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் தென்படவில்லையே! ஒருவேளை இதைத்தான் ஆன்மிக ‘அரசியல்’ என்று கூறுகிறார் களோ என்னவோ? அதை விடுங்கள்.

இத்தனை மடாதிபதிகளை அழைத்து விழா நடத்தியவர்கள், எப்படி இன்னொரு முக்கியப் பிரமுகரைத் தவிர்த்தார்கள் என்பது விளங்கவில்லை.

பிரதமர் பேசியபோது, காஞ்சிக்கும் காசிக்கும் உள்ள ஆலயங்களின் ஒற்றுமைகளை எடுத்துக் கூறினார். காசி விசுவநாதர், காஞ்சி ஏகாம்பர நாதரை எல்லாம் குறிப்பிட்டார். அந்த சிவனுக்காக ஒரு நாட்டையே சிருஷ்டித்துள்ளவர் அந்தப் பிரமுகர்!

"தமிழைப் பலிகடாவாக்க காசி தமிழ்ச் சங்கமம்; உங்கள் சூழ்ச்சியை தமிழ்நாடு  சுக்குநூறாக்கும்": சிலந்தி தாக்கு

தமிழ்நாட்டு ஆளுநர் ரவி, மதம் சாராத நாடு இருக்க முடியாது என்று கூறியதற்கொப்ப ஒரு மதத்தை, ஆளுநர் ரவியும், பிரதமர் மோடியும், விரும்புகிறபடி நிறுவி ஒரு மதச்சார்பான நாட்டை உருவாக்கி ஆண்டு கொண்டிருப்பவர்! அந்த நாட்டின் பெயரையே ‘கைலாசா’ என்று வைத்து, தன்னையே சிவனின் மறு அவதாரமாக அறிவித்து, ஆட்சி புரிந்துகொண்டு முடிசூடா மன்னனாகக்கூட அல்ல; முடி சுமந்த மன்னனாக காட்சியளித்துக் கொண்டிருப்பவர்!

இந்தியாவின் அரசியல் சட்டம்கூட, இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று கூறுகிறது; ஆனால், அவருடைய நாட்டில் அந்தப் பிரச்சினையே இல்லை! ஆளுநர் ரவி போன்றவர்களும், ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினரும் இந்தியாவை எப்படி மாற்றி அமைக்க விரும்புகின்றனரோ அதுபோன்ற ஒரு நாட்டை சிருஷ்டித்து வாழ்ந்து கொண்டிருப்பவர் அந்த ‘அற்புத அவதாரம்’ ( ! ) நித்யானந்தாவை ஏன் இந்தச் சங்கமத்துக்கு அழைக்காமல் விட்டார்கள் என்பது புரியவில்லை!

ஓர் அழைப்பு அனுப்பியிருந்தால் மறுநிமிடமே புஷ்பக விமானத்தை சிருஷ்டித்து அதிலே பறந்து வந்திருப்பாரே! அவரை ஏன் விட்டுவிட்டார்கள்; என்று தெரியவில்லை!.

பிரபல நடிகர்கள் தாங்கள் பங்கேற்கும் விழாக்களில் மற்றொரு பிரபல நடிகர் பங்கேற்பதைத் தவிர்த்து விடுவார்கள்! மக்களின் கவனம் தங்கள் மீது மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில் தனிக் கவனம் செலுத்துவர்! ஒருவேளை பிரதமர் மோடி அப்படி நினைத்து விட்டாரா? நித்யானந்தா வந்திருந்தால், வந்திருந்த கூட்டத்தின் மொத்த கவனமும் அவரைச் சுற்றி போய் விடுமோ என்ற பயத்தில் விழா ஏற்பாட்டாளர்கள் தவிர்த்து விட்டார்களோ என்னவோ புரியவில்லை!

என்ன இருந்தாலும் இத்தனை மடாதிபதிகள் அழைக்கப்பட்டிருந்தாலும், மதுரை ஆதினத்தின் மடாதிபதியாக சிறிது காலம் இருந்த நித்யானந்தா இல்லாதது அவரது பக்தர்களுக்கு ஒரு குறைதானே!

"தமிழைப் பலிகடாவாக்க காசி தமிழ்ச் சங்கமம்; உங்கள் சூழ்ச்சியை தமிழ்நாடு  சுக்குநூறாக்கும்": சிலந்தி தாக்கு

கேள்வி : காசியில் தமிழ்ச் சங்கமம் விழா நடத்தி தமிழ் மேல் தனக்குள்ள பற்றைக் காண்பித்துள்ளார் பிரதமர் மோடி என்று இங்கு சில வலதுசாரிகள் கூறித்திரிகின்றனரே?

பதில்: இந்த ‘பம்மாத்து’ வேலைகள் எல்லாம் எதற்காகச் செய்கிறார்கள் என்பதை தமிழ் மக்கள் அறியாதவர்களல்ல; “நானே சொன்னாலும், அது ஏன்? எதற்காக? – என்று கேட்டு சிந்தித்து தெளிவு கொள்” – என்று தந்தை பெரியாரால் பயிற்றுவிக்கப்பட்ட மண்! எத்தர்கள் எப்படியெல்லாம் நாடகம் நடத்தி தங்களது காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள் என்பதற்கு பல வரலாற்றுப் பாடங்களைச் சொல்லி அண்ணாவால் தெளிவுபடுத்தப்பட்ட மக்களைக் கொண்ட மண்!

‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ – என்று, வெற்றி தோல்விகள் பற்றிக் கவலைப்படாது தமிழ் மக்களை தலைவர் கலைஞர் அவர்கள், தன் சொல்லால், எழுத்தால், சுவையூறும் நாடகத்தால், நல்ல திரைப்படத் தால் தயார்படுத்திய மண்! இங்கே, மோடி – அமித்ஷா கூட்டத்தின் நாடகங்கள் அரங்கேறாது!.

"தமிழைப் பலிகடாவாக்க காசி தமிழ்ச் சங்கமம்; உங்கள் சூழ்ச்சியை தமிழ்நாடு  சுக்குநூறாக்கும்": சிலந்தி தாக்கு

கேள்வி: தமிழுக்காக ஒரு விழா எடுத்திடும் மோடியைப் பாராட்ட வேண்டாமா?

பதில்: இந்த வாணவேடிக்கைகளை நம்பிட தமிழர்கள் இளித்தவாயர்கள் அல்ல! தமிழையும், ஆட்சிமொழியாக் கட்டும், தமிழ் உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழி என அறிவிக்கட்டும்! செம்மொழி தமிழ் வளர்ச்சிக்கு உரிய நிதி ஒதுக்கட்டும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிடட்டும்; சமஸ்கிருதத்தை தூக்கி நிறுத்திடச் செலவிடும் தொகை அளவு செம்மொழித் தமிழ் வளர்ந்திட நிதி ஒதுக்கட்டும்; இந்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வந்தால் பிரதமர் மோடியை உச்சிமோந்து பாராட்டிடத் தயார்!.

சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஒற்றை மொழியாக்கி, இந்தியாவை இந்துத்துவா நாடாக்கும் வஞ்சக எண்ணத்துடன் சூழ்ச்சி வலை விரித்தால், அதனைச் சுக்கு நூறாக்கிட தமிழ்நாடு தயங்காது என்பதை மட்டும் பிரதமர் மோடிக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்!

கேள்வி: மொத்தத்தில் காசி தமிழ்ச்சங்கம நிகழ்ச்சி…?

பதில்: தமிழ்ச்சங்கமத்தில், குறைந்தபட்சம், “தென்னாடுடைய சிவனே போற்றி… எந் நாட்டவருக்கும் இறைவா போற்றி!....” என்ற பாடல்கூட ஒலிக்கவில்லை; ‘‘ஹரஹர மஹாதேவ்… ருத்ராய … ருத்ராய… நமோ… சம்போ.. சம்போ.. சங்­கரா.. சம்போ…’’ என்றும், ‘‘ஜனனி… ஜனனி…’’ என்றும்தானே பாடல்கள் கேட்டன! அது தமிழ்ச்சங்கம நிகழ்ச்சி அல்ல; சமஸ்கிருதமும் இந்தியும், தமிழை ‘சம்ஹாரம்’ செய்த நிகழ்ச்சி… ஆட்டுக்கு மாலை சூட்டி பலிபீடத்துக்குக் கொண்டு செல்வது போல, தமிழைப் பலிகடாவாக்க திட்டமிட்டு நடத்தப்படும் சூழ்ச்சி!.

banner

Related Stories

Related Stories