அரசியல்

அரசியலில் 60 ஆண்டுகால அனுபவம்.. தற்போது காங்கிரஸ் கட்சி தலைவர் - யார் இந்த மல்லிகார்ஜூன கார்கே?

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அரசியலில் 60 ஆண்டுகால அனுபவம்.. தற்போது காங்கிரஸ் கட்சி தலைவர் - யார் இந்த மல்லிகார்ஜூன கார்கே?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ச்சியாக 2 முறை காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இதனால் காங்கிரஸ் கட்சியில் வலுவான தலைமை இல்லை என மூத்த தலைவர்களே குற்றம்சாட்டினர். மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததால் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்திக்குப் பிறகு பதவியேற்ற ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து மீண்டும் தலைவராக தற்போது சோனியா காந்தி இருந்து வருகிறார். இருப்பினும் பா.ஜ.க-வை எதிர்கொள்வதற்கும் அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும் கட்சிக்கு வலுவான தலைமை தேவை என்ற கோரிக்கை தொடர்ச்சியாக எழுந்து வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தலைவர் பதவி குறித்துத் தெளிவான முடிவு எடுத்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். மேலும் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தலைவர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்காமல் இருந்தனர்.

இதையடுத்து மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், சசி தரூர், திக்விஜய் சிங், கமல்நாத் போன்ற பலரும் விருப்பம் தெரிவித்து வந்தனர். பின்னர் தலைவர் போட்டியிலிருந்து அசோக் கெலாட் விலகினார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்ததை அடுத்து மல்லிகார்ஜுன் கார்கே, சசி தரூர், கே.என்.திரிபாதி ஆகிய மூன்று பேர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதனால் தலைவர் பதவிக்கு மும்முனை போட்டி ஏற்பட்டது. பின்னர் கே.என்.திரிபாதி அவரின் மனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் அக்டோபர் 17-ம் தேதி இந்திய முழுவதும் காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைமை அலுவலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவுகளின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்குமுடிவுகள் வெளியாகியுள்ளது.

இதில், மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகள் பெற்று அபார வெற்றிப் பெற்றுள்ளார். சசிதரூர் சுமார் 1,000 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவிய நிலையில், 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த மல்லிகார்ஜூன கார்கே?

கர்நாடக மாநிலம் பீதரில் உள்ள வரவட்டி கிராமத்தில் 1942-ல் பிறந்தவர். இவர் சிறுவனாக இருக்கும் போது பீதரில் நடந்த மதக்கலவத்தால் வீட்டை இவரின் குடும்பம் இழந்தநிலையில், குல்பர்காவுக்கு புலம்பெயர்ந்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அன்றைய தினம் செயல்பட்டுவந்த அம்பேத்கரின் மப்பண்ணா தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பில் இவரது தந்தை உறுப்பினராக இருந்ததால், சிறுவயதிலே அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்ற கார்கே,1956-ல் அம்பேத்கர் பவுத்தம் தழுவிய போது இவரும் குடும்பத்தினருடன் பவுத்தம் தழுவினார்.

பள்ளி கல்லூரி படிப்பை முடிந்த மல்லிகார்ஜூன கார்கே உச்சநீதி மன்றத்தில் உதவி வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர் தன்னுடைய வாதாடும் திறனால் தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்கு ஏற்பட்டது. மேலும் குல்பர்கா மாவட்ட நீதிமன்றத்தில் தொழிலாளர் நலன் சார்ந்த வழக்குகளை திறம்பட கையாண்டார்.

1969-ல் காங்கிரஸில் இணைந்த மல்லிகார்ஜூன கார்கே, அதே ஆண்டில் நடந்த குல்பர்கா நகர பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதைத் தொடர்ந்து 1972-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கார்கேவை தேடி வந்தது. 1972-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டுவரை நடந்த 9 சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றார். இதனால் ‘தோல்வியை தழுவாத சர்தார்’ என கொண்டாடப்பட்டார்.

கார்கேவுக்கு 1976-ம் ஆண்டு தேவராஜ் அர்ஸ் தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைத்தது. அரசியலில் 60 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த மல்லிகார்ஜூன கார்கே மீது பெரிதாக ஊழல் புகாரும், குற்றப் பின்னணி வழக்குகளும் இல்லை.

banner

Related Stories

Related Stories